உலக கோப்பைக்கு பின் ஓய்வு.. இரட்டை சத நாயகன் அதிரடி அறிவிப்பு
ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 275 சிக்ஸர்களுடன் அஃப்ரிடிக்கு அடுத்த இரண்டாவது இடத்தில் உள்ளார்.
உலக கோப்பைக்கு பின் சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக கிறிஸ் கெய்ல் அறிவித்துள்ளார்.
1999ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணியில் அறிமுகமான கிறிஸ் கெய்ல், சர்வதேச அளவில் மிகச்சிறந்த அதிரடி வீரராக திகழ்ந்துவருகிறார். 2000ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான கெய்ல், 2014ம் ஆண்டுடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் ஆடிவருகிறார்.
284 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள கிறிஸ் கெய்ல், 23 சதங்கள் அடித்து ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதமடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரராக திகழ்கிறார். தனது அதிரடியான பேட்டிங்கால் டி20 ஸ்பெலிஷ்ட்டாக வலம் வருகிறார். ஐபிஎல், பிபிஎல், கனடா பிரீமியர் லீக், ஆஃப்கானிஸ்தான் பிரீமியர் லீக் உள்ளிட்ட பல டி20 லீக் தொடர்களில் ஆடிவருகிறார்.
அதிரடிக்கு பெயர்போன கெய்ல், சிக்ஸர்கள் விளாசுவதில் வல்லவர். ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 275 சிக்ஸர்களுடன் அஃப்ரிடிக்கு அடுத்த இரண்டாவது இடத்தில் உள்ளார் கெய்ல்.
கிரிக்கெட்டில் பேட்டிங்கில் எட்டப்பட்டுள்ள மைல்கற்களில் டாப் 5 இடங்களில் கெய்லின் பெயரும் இருக்கும். அதிக சிக்ஸர்கள், டாப் ஸ்கோர் ஆகிய பட்டியல்களில் கெய்லின் பெயர் கண்டிப்பாக இருக்கும். ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமும் அடித்துள்ளார் கெய்ல். 2015 உலக கோப்பையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இரட்டை சதம் விளாசிய கெய்ல் 215 ரன்களை குவித்தார். உலக கோப்பை தொடரில் இரட்டை சதமடித்த ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றவர் கெய்ல்.
கடந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கு பிறகு ஒருநாள் போட்டிகளில் கெய்ல் ஆடாமல் இருந்தார். உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் அணியில் கெய்ல் இடம்பிடித்துள்ளார். எனவே உலக கோப்பையில் அவர் ஆடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்நிலையில், உலக கோப்பைக்கு பின் சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.