சென்னையை சேர்ந்த இளம்பரிதி 16 வயதில் செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். அவருக்கு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்திய வீரர் சென்னையை சேர்ந்த 16 வயதான இளம்பரிதி கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். அதாவது போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவில் நடந்த பிஜெல்ஜினா ஓபனில் தனது இறுதி GM நார்ம்-ஐப் பெற்ற பிறகு இளம்பரிதி இந்தியாவின் 90வது கிராண்ட்மாஸ்டர் ஆனார். தமிழ்நாட்டின் 35வது கிராண்ட்மாஸ்டர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற இளம்பரிதி
2009 இல் பிறந்த இளம்பரிதி இதற்கு முன்னர் வியட்நாமில் நடந்த ஹனோய் போட்டியில் (டிசம்பர் 2023) தனது முதல் GM நார்ம்-ஐயும், அதைத் தொடர்ந்து சிங்கப்பூர் சர்வதேச ஓபனில் (2024) தனது இரண்டாவது நார்ம்-ஐயும் அடைந்தார். ரில்டன் கோப்பை (Rilton Cup) (2024-25) போட்டியின் போது 2500 எலோ புள்ளிகளைக் கடந்தார். போஸ்னியாவில் பெற்ற இறுதி நார்ம், அவரது கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை உறுதி செய்துள்ளது.
உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்
இளம்பரிதி தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று இந்த சாதனையை படைத்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட உதயநிதி ஸ்டாலின், ''இந்தியாவுடைய 90வது கிராண்ட்மாஸ்டர் ஆகவும், தமிழ்நாட்டின் 35வது கிராண்ட்மாஸ்டர் ஆகவும் ஆன இளம்பார்த்தி A R அவர்களுக்கு வாழ்த்துகள்!
மேலும் வெற்றிகளை பெற வாழ்த்துகள்
விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) சாம்பியன்ஸ் மேம்பாட்டுத் திட்டத்தின் (Champions Development Scheme) பெருமைமிக்க பயனாளியான இவர், போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவில் நடைபெற்ற GM4 #Bijeljina2025ChessFestival இல் தனது இறுதி கிராண்ட்மாஸ்டர் நார்ம்-ஐ (norm) வென்றார். அவருடைய எதிர்கால செஸ் பயணத்தில் தொடர்ச்சியான வெற்றியை மேலும் பெற வாழ்த்துகிறேன்'' என்று கூறியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ''தமிழ்நாட்டின் 35வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு வாழ்த்துகள். அவர் தனது திறமையுடன் போராடி வெற்றி பெற்று தமிழ்நாட்டின் சாம்பியன் கிரீடத்தில் மற்றொரு ரத்தினத்தைச் சேர்த்துள்ளார். தமிழ்நாட்டுச் செஸ் விளையாட்டின் புகழ் மேலும் உயர்வதால் திராவிடமாடல் அரசு ஒவ்வொரு நம்பிக்கைக்குரிய நகர்வையும் ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக்காக மாற்றிக் கொண்டே இருக்கும். தமிழகத்தில் மேலும் பல கிராண்ட் மாஸ்டர்கள் உருவாகுவார்கள்'' என்றார்.
