சென்னை அணி 65-22 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று கோவை அணியை துவம்சம் செய்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

 தமிழக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கபடி போட்டி திருநெல்வேலியில் வியாழக்கிழமை தொடங்கியது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவை சார்பில் தமிழக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கபடிப் போட்டி திருநெல்வேலி அபிசேகப்பட்டியில் உள்ள பல்கலைக்கழக மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.விக்ரமன் போட்டிகளைத் தொடங்கி வைத்தார். பல்கலைக்கழக துணைவேந்தர் கி. பாஸ்கர் தலைமை வகித்தார். பதிவாளர் அ.ஜான் டி பிரிட்டோ போட்டி அட்டவணையை வெளியிட்டார்.

இந்தப் போட்டியில் மகளிர் பிரிவில் 12 அணிகளும், ஆடவர் பிரிவில் 16 அணிகளும் பங்கேற்றுள்ளன.

ஆடவர் பிரிவு முதல் போட்டியில் சென்னை பல்கலைக்கழக அணியும், கோவை கற்பகம் பல்கலைக்கழக அணியும் மோதின.

இதில் சென்னை அணி 65-22 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றது.

மகளிர் பிரிவு முதல் போட்டியில் தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழக அணி 34-19 என்ற புள்ளிகள் கணக்கில் அண்ணாமலைப் பல்கலைக்கழக அணியை வீழ்த்தியது.

முதல் நாளில் மொத்தம் 8 போட்டிகள் மின்னொளியில் நடத்தப்பட்டன.

போட்டியின் நிறைவு விழா வெள்ளிக்கிழமை (இன்று) நடைபெற உள்ளது.

போட்டிகளில் சிறப்பிடம் பெறும் அணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்க உள்ளார்.