சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ்: இறுதி ஆட்டத்தில் யூகி பாம்ப்ரி - ஜோர்டான் தாம்சன் மோதல்...
சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி - ஆஸ்திரேலியாவின் ஜோர்டான் தாம்சன் மோதுகின்றனர்.
சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டியின் அரையிறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் யூகி பாம்ப்ரியும், 3-வது இடத்தில் இருந்த தென் கொரியாவின் டக்ஹீ லீயும் மோதினர்.
விறு விறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முடிவில் யூகி 7-5, 6-2 என்ற செட்களில் வெற்றி பெற்றார்.
இந்த ஆட்டத்தில் யூகி ஒரு பிரேக் பாய்ண்ட்டை கூட சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இத்துடன் லீயை 2 முறை சந்தித்துள்ள யூகி, அவருக்கு எதிராக தனது 2-ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளார்.
அத்துடன், உலகத் தரவரிசையில் முதல் 100 இடங்களுக்குள்ளாக மீண்டும் முன்னேறும் வாய்ப்பையும் அவர் உறுதி செய்துள்ளார்.
மற்றொரு அரையிறுதியில் தாம்சன் 6-1, 7-6 என்ற செட்களில் ஸ்பெயினின் பெட்ரோ மார்டினௌஸை வீழ்த்தினார். இதையடுத்து இறுதி ஆட்டத்தில் யூகி - தாம்சன் மோதுகின்றனர்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி - விஷ்ணு வர்தன் இனை 7-6, 5-7, 10-5 என்ற செட்களில் துருக்கியின் செம் இல்கெல் - செர்பியாவின் டனிலோ பெட்ரோவிச் இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றனர்.