புனே,
எட்டு அணிகள் இடையிலான 3–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் ஞாயிற்றுக் கிழமை இரவு புனேயில் நடந்த 21–வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி.யும், புனே சிட்டியும் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 1–1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
சென்னை அணியில் 28–வது நிமிடத்தில் ஜெஜெ லால்பெகுலாவும், புனே அணியில் 82–வது நிமிடத்தில் ரோட்ரிகசும் கோல் அடித்தனர். ரோட்ரிகஸ், ‘பிரீகிக்’ வாய்ப்பில் பந்தை பிரமாதமாக உதைத்து கோலாக்கியது கவனிக்கத்தக்கது.
இதுவரை 5 ஆட்டங்களில் ஆடியுள்ள சென்னையின் எப்.சி. அணி 2 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வி என்று 8 புள்ளிகளுடன் 3–வது இடத்தில் உள்ளது. புனே அணி 5 புள்ளியுடன் (ஒரு வெற்றி, 2 டிரா, 2 தோல்வி) 6–வது இடத்தில் இருக்கிறது.
இன்று இரவு 7 மணிக்கு படோர்டாவில் நடக்கும் ஆட்டத்தில் எப்.சி. கோவா–கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் எதிர்கொள்கின்றன.
