வீட்டில் திருட முயன்ற மர்ம நபர் கத்தியால் குத்தியதில் காயமடைந்த செக்.குடியரசு டென்னிஸ் வீராங்கனை பெட்ரா கிவிட்டோவாவுக்கு புதன்கிழமை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இரு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவரான கிவிட்டோவாவின் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர், அவருடைய இடது கையில் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினார்.

இதையடுத்து பலத்த காயமடைந்த அவருக்கு இப்போது அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இடது கை வீராங்கனையான கிவிட்டோவா வரும் சீசனில் முதல் 3 மாதங்கள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவருடைய செய்தித் தொடர்பாளர் கரேல் தெஜ்கால் "கிவிட்டோவாவுக்கு 3 மணி நேரம், 45 நிமிடங்கள் அறுவை சிகிச்சை நடைபெற்றது.

அவர் பலத்த காயமடைந்துள்ளதால், அடுத்த 3 மாதங்கள் பயிற்சியில் ஈடுபட முடியாது. அதனால் ஆஸ்திரேலிய ஓபன் உள்ளிட்ட சீசனின் முக்கியப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை அவர் இழந்துள்ளார்.

மர்மநபர் கத்தியால் குத்தியதில் கிவிட்டோவாவின் இடது கை, அதன் 5 விரல்கள், இரண்டு நரம்புகள் ஆகியவற்றில் காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த காயம் கிவிட்டோவின் ஆட்டத்திறனை பாதிக்குமா என்பது தெரியவில்லை.

தற்போதைய நிலையில் அவரை காப்பாற்றுவதற்காகவும், அவருடைய எதிர்கால வாழ்க்கையை கருத்தில் கொண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது' என்றுத் தெரிவித்தார்.

கிவிட்டோவாவை கத்தியால் குத்தியவர் 35 வயது நபர். அவரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என காவலாளர்கள் தெரிவித்துள்ளனர்.