Champion of Indian wrestling at World Wrestling Championship Gold for India after 24 years

உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்கோம் மீராபாய் சானு தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்கோம் மீராபாய் சானு தங்கப் பதக்கம் வென்றுள்ளதன்மூலம் கடந்த 20 ஆண்டுகளில் இந்தப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் அனஹைம் நகரில் நடைபெற்று வருகிறது.

இதில், இந்தியாவின் மீராபாய் சானு, மகளிருக்கான 48 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்டார். அதில் மொத்தமாக 194 கிலோ (ஸ்னாட்ச் 85+கிளின் அன்ட் ஜெர்க் 109) எடையை தூக்கி அவர் முதலிடம் பிடித்தார். இத்துடன் அவர் தேசிய சாதனை படைத்துள்ளார்.

இதனிடையே, இப்பிரிவில் போட்டியிட்ட தாய்லாந்தின் சுக்சாரோன் துன்யா 193 கிலோ எடையை தூக்கி வெள்ளியும், கொலம்பியாவின் அனா ஐரிஸ் செகுரா 182 எடையுடன் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

வெற்றிக்குப் பிறகு மீராபாய் சானு, "நான் தற்போது எட்டியுள்ள இந்த சாதனைக்கு எனது பயிற்சியாளர் விஜய் சர்மாவே காரணம். ஒரு உயர்வான வெற்றியை எட்டுவதற்காக அனைத்துவிதமான கடுமையான முயற்சிகளையும் மேற்கொண்டோம்.

ரியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்ல இயலாமல் போனது ஏமாற்றமாக இருந்தது. அதில் நான் தவறுகள் செய்தேன். அதற்காக இப்போதும் வருந்துகிறேன். தற்போது உலக சாம்பியன்ஷிப்பில் வென்றுள்ள இந்தத் தங்கம், அந்தத் துயரங்களை அகற்றியுள்ளன.

என்னை இன்னும் சிறப்பாக மேம்படுத்திக் கொண்டு, எதிர்வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி, ஆசிய விளையாட்டுப் போட்டி, டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஆகியவற்றில் பதக்கம் வெல்வதில் கவனம் செலுத்த உள்ளேன்" என்று மீராபாய் கூறினார்.