”தல” முன்னாடி நிற்கும்போது பேச்சு கூட வரல..! தோனியை கண்ட முதல் கணம்.. சுழல் பகிரும் சுவாரஸ்யம்
முதன்முதலில் தோனியை கண்ட சமயத்தில் அவருக்கு முன் நிற்கும்போது பேச்சு கூட வரவில்லை என சுழற்பந்து வீச்சாளர் சாஹல் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் வெற்றிகரமான ஸ்பின்னராக வலம் வருபவர் ரிஸ்ட் ஸ்பின்னர் சாஹல். அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜாவின் ஸ்பின் இடங்களை சாஹலும் குல்தீப்பும் பெற்றுவிட்டனர். இந்த இரண்டு ரிஸ்ட் ஸ்பின்னர்களும் வெற்றிகரமான ஸ்பின் பவுலர்களாக வலம் வருகின்றனர்.
கடந்த 2016ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சாஹல் அறிமுகமானார். கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பாக பந்துவீசிவருகிறார். தற்போது இந்திய அணியின் நிரந்தர ஸ்பின்னராக வளர்ந்துள்ள சாஹல், பிரேக்ஃபாஸ்ட் வித் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது தோனியுடனான முதல் சந்திப்பு குறித்த சுவாரஸ்யங்களை பகிர்ந்துள்ளார். அப்போது பேசிய சாஹல், முதல் போட்டியில் கலந்துகொண்ட போது, தோனி தான் எனக்கு தொப்பியை வழங்கினார். மிகச்சிறந்த மற்றும் சீனியர் வீரரான தோனியை அப்போதுதான் முதலில் சந்தித்தேன். அவருக்கு முன்னால் நிற்கும்போது பேச்சு கூட வரவில்லை. ஆனால் அவரோ மிகவும் இனிமையாக என்னுடன் பேசினார். ஆரம்பத்தில் அவரை சார் என்று அழைத்தேன். ஆனால் அவரோ, சார் என்று அழைக்க வேண்டாம்; எனது பெயரை சொல்லியோ அல்லது பாய்(அண்ணா) என்றோ அழைக்கும்படி கூறினார் என சாஹல் தெரிவித்தார்.