ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் இந்திய விளையாட்டு வீரர்களின் டிரெய்னிங்கிற்கு பிசிசிஐ ரூ.10 கோடி நிதியதவி
ஒலிம்பிக்கில் கலந்துகொண்டு இந்தியாவிற்காக விளையாடவுள்ள விளையாட்டு வீரர்களின் பயிற்சி மற்றும் முன் தயாரிப்பிற்கு உதவும் வகையில் ரூ.10 கோடியை நிதியுதவியாக வழங்குகிறது பிசிசிஐ.
கொரோனா அச்சுறுத்தலால் கடந்த ஆண்டு நடக்க வேண்டிய டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் இந்தாண்டு நடக்கிறது. வரும் ஜூலை 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடக்கின்றன.
கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி, கடும் கட்டுப்பாடுகளுடன் போட்டிகள் நடக்கவுள்ளன. குறிப்பாக கொரோனா 2ம் அலையால் கடுமையாக பாதிக்கப்பட்ட இந்தியாவை சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த கட்டுப்பாடுகள் குறித்த அதிருப்தியை இந்தியா வெளிப்படுத்தியிருந்தது.
ஒலிம்பிக்கிற்காக இந்திய விளையாட்டு வீரர்கள் மிகத்தீவிரமாக தயாராகிவருகின்றனர். இந்நிலையில், ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் கலந்துகொள்ளும் விளையாட்டு வீரர்களின் பயிற்சி மற்றும் முன் தயாரிப்பிற்கு உதவும் வகையில் ரூ.10 கோடியை பிசிசிஐ நிதியுதவியாக வழங்குகிறது.
பிசிசிஐ உயர்மட்ட குழு மீட்டிங்கில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. எனவே பிசிசிஐ ரூ.10 கோடியை நிதியுதவியாக வழங்குகிறது. உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ, கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டுகிறது. எனவே ரூ.10 கோடி என்பது பிசிசிஐக்கு பெரிய விஷயமே இல்லை. இந்தியாவை பொறுத்தமட்டில் கிரிக்கெட்டிற்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதிகமான ரசிகர்களை பெற்ற விளையாட்டும் கிரிக்கெட் தான். எனவே கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ தான், செல்வ செழிப்புடன் திகழ்கிறது. இந்நிலையில், ஒலிம்பிக் வீரர்களுக்கு உதவ பிசிசிஐ முன்வந்திருப்பது ஆரோக்கியமான விஷயம்.