BCCI asked comment to Indian players on appointment of coach
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கான நியமனம் தொடர்பாக இந்திய அணியினரிடம் கருத்து கேட்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
கேப்டன் கோலி கடந்த சில நாள்களுக்கு முன்பு செய்தியாளர்கள் சந்திப்பின்போது, 'எந்தவொரு விவகாரத்திலும் பிசிசிஐ கருத்து கேட்டால் மட்டுமே அதுதொடர்பாக பரிந்துரைகளை வழங்குவேன்' என்று கூறியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து பயிற்சியாளர் மற்றும் துணை ஊழியர்கள் நியமனம் தொடர்பாக இந்திய அணியினரிடம் விரிவாக கலந்தாலோசிக்க முடிவு செய்துள்ளது பிசிசிஐ.
பிசிசிஐ நிர்வாகக் குழுவின் அனுமதியைப் பெற்று, பிசிசிஐ தலைமை நிர்வாக அதிகாரி ராகுல் ஜோரி நேற்று ஜமைக்கா சென்றுள்ளார்.
அவர் திரும்ப வந்ததும் பயிற்சியாளர் நியமனம் தொடர்பாக கேப்டன் உள்ளிட்ட இந்திய வீரர்கள் தெரிவிக்கும் கருத்துகள், பயிற்சியாளரை தேர்வு செய்யும் கிரிக்கெட் ஆலோசனைக் குழுவிடம் (சிஏசி) தெரிவிக்கப்படும்.
புதிய பயிற்சியாளருடன் வீரர்களுக்கு எந்தவித முரண்பாடும் ஏற்படக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
