கொத்தனார் வேலைக்குச் செல்லும் பிரபல கிரிக்கெட் வீரர்…. உண்மைதாங்க !!
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ள ஆஸ்த்திரேலிய கிரிக்கெட் வீரர் தற்போது கொத்தனார் வேலை பார்த்து வருகிறார்.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக கடந்த மாதம் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது பந்தை சேதப்படுத்தியதாக ஆஸ்திரேலியாவின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் பான்கிராப்ட் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓராண்டு தடையும், பான்கிராப்ட்டுக்கு 9 மாதங்கள் தடையும் விதிக்கப்பட்டது.
இதனால் ஆஸ்திரேலியாவின் ஒப்பந்த பட்டியலில் இருந்தும் இவர்கள் நீக்கப்பட்டனர். தவிர, ஐ.பி.எல் போட்டியில் இருந்தும் ஸ்மித், வார்னருக்கு தடை விதித்து பிசிசிஐ நடவடிக்கை எடுத்தது.
பெரிய சர்ச்சைக்குள்ளான இந்த விஷயத்தில், தாங்கள் பெற்ற தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்று மூவரும் அறிவித்தனர். இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பின்போது மக்களிடமும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடமும் தாங்கள் செய்த தவறுக்கு கண்ணீர் விட்டு மன்னிப்பு கேட்டுக் கொண்டனர்.
இந்நிலையில், கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கி இருக்கும் வார்னர் தனது உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள தற்போது கட்டிட தொழிலாளியாக மாறியுள்ளார். சிட்னி நகரில் 10 மில்லியன் டாலர் செலவில் வார்னர் ஒரு வீடு கட்டி வருகிறார். தற்போது இந்த வீட்டின் கட்டுமான பணிகளை வார்னரும் இணைந்து செய்து வருகிறார்.
செங்கல், சிமிண்ட் கலவை போன்றவற்றைக் கொண்டு அவர் அழகாக சுவர் எழுப்பி வருவதாக வார்னரின் மனைவி கேண்டிஸ் வார்னர் தெரிவித்துள்ளார். , கட்டுமான பணிகள் செய்யும் தனது கணவர் மற்றும் குழந்தைகளின் புகைப்படங்களை அவர் சமூக வலைத்தளத்தில் பதிவுட்டுள்ளார்.
கிரிக்கெட் இல்லையின்னாலும் வார்னர் கொத்தனார் வேலை செய்து பிழைத்துக் கொள்வார் என நெட்டிசன்கள் வார்னரை கலாய்த்து வருகின்றனர். அதே நேரத்தில் இந்த ஓய்வின்போது அவர் நேரத்தை வீணடிக்காமல் ஒரு நல்ல வேலையைப் பார்த்து வருகிறார் என பலரும் வார்னரை பாராட்டுகின்றனர்.