வலுவான முன்னிலையுடன் மூன்றாம் நாளை முடித்த ஆஸ்திரேலியா!!
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே பெர்த்தில் நடந்துவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் முடிவில் இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்துள்ளது ஆஸ்திரேலிய அணி.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே பெர்த்தில் நடந்துவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் முடிவில் இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்துள்ளது ஆஸ்திரேலிய அணி.
நேற்று முன் தினம் பெர்த்தில் தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 326 ரன்களை எடுத்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, விராட் கோலியின் அபார சதம் மற்றும் ரஹானேவின் பொறுப்பான அரைசதத்தால் 283 ரன்கள் சேர்த்தது.
43 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் ஃபின்ச் மற்றும் மார்கஸ் ஹாரிஸ் ஆகிய இருவரும் சிறப்பாக தொடங்கினர். ஷமியின் பந்துவீச்சில் கையில் காயமடைந்து ஃபின்ச் ரிட்டயர்டு ஹர்ட் ஆகி வெளியேறினார்.
இதைத்தொடர்ந்து ஷான் மார்ஷை 5 ரன்களில் ஷமி அவுட்டாக்கினார். அதன்பிறகு பெரிய பார்ட்னர்ஷிப் எதையும் அமைக்கவிடாத இந்திய பவுலர்கள், மார்கஸ் ஹாரிஸ், ஹேண்ட்ஸ்கம்ப் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோரை அவுட்டாக்கி அனுப்பினர். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் உஸ்மான் கவாஜா நிதானமாக ஆடி ரன்களை சேர்த்துவருகிறார். அவருடன் அந்த அணியின் கேப்டன் டிம் பெய்ன் இணைந்து ஆடிவருகிறார்.
மூன்றாம் நாளான இன்றைய ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய 4 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்துள்ளது. உஸ்மான் கவாஜா 41 ரன்களுடனும் டிம் பெய்ன் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 175 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய வலுவான நிலையில் மூன்றாம் நாள் ஆட்டத்தை முடித்துள்ளது.