திருநெல்வேலியில் நடைபெற்ற மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் அனைத்துப் பிரிவினருக்கான போட்டியில் சென்னையைச் சேர்ந்த குணாள் முதலிடம் பெற்றார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

திருநெல்வேலி மாவட்ட சதுரங்க முன்னேற்றக் கழகம் சார்பில், மாநில அளவிலான சதுரங்கப் போட்டி 2 நாள்கள் நடைபெற்றது. இப்போட்டியை மாவட்ட சார்பு நீதிமன்ற நீதிபதி டி. செல்வம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.

ஐந்து பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டியில் மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

அனைத்துப் பிரிவினருக்கான போட்டியில் சென்னையைச் சேர்ந்த குணாள் முதலிடமும், பி.எஸ்.என்.எல். ஊழியர் ராம் எஸ்.கிருஷ்ணன் 2-ஆவது இடமும் பெற்றனர்.

7 வயதுக்குள்பட்டோர் ஆண்கள் பிரிவில் கன்னியாகுமரியைச் சேர்ந்த ரோஷன் முதலிடமும், திருநெல்வேலியைச் சேர்ந்த காலிங்கத்துரை 2ஆவது இடமும், பெண்கள் பிரிவில் விதுலா அன்புச்செல்வி முதலிடமும், சாதனா 2ஆவது இடமும் பெற்றனர்.

9 வயதுக்குள்பட்டோர் ஆண்கள் பிரிவில் குமரியைச் சேர்ந்த அஸ்வத் முதலிடமும், திருநெல்வேலியைச் சேர்ந்த மிதுன்பாலா 2ஆவது இடமும், பெண்கள் பிரிவில் சென்னையைச் சேர்ந்த ஐஸ்வர்யலட்சுமி முதலிடமும், சிவகங்கையைச் சேர்ந்த இந்திரா பிரியதர்ஷினி 2ஆவது இடமும் பெற்றனர்.

11 வயதுக்குள்பட்டோர் ஆண்கள் பிரிவில் குமரியைச் சேர்ந்த பிரதியூஸ் முதலிடமும், கோகுல் ரவிசந்திரன் 2ஆவது இடமும், பெண்கள் பிரிவில் திருச்சி மிருதுபாஷினி முதலிடமும், தூத்துக்குடி ரோஜா 2ஆவது இடமும் பெற்றனர்.

13 வயதுக்குள்பட்டோர் ஆண்கள் பிரிவில் திருநெல்வேலி யுகாஸ்ராம் முதலிடமும், மதுரை பிரவீண் 2ஆவது இடமும், பெண்கள் பிரிவில் தூத்துக்குடி மோக்தலின்ராய் முதலிடமும், பெமின் 2ஆவது இடமும் பெற்றனர்.

சர்வதேச நடுவர் எஸ். செல்வமணிகண்டன் நடுவராக செயல்பட்டார். பின்னர், நடைபெற்ற நிகழ்ச்சியில், வெற்றி பெற்றவர்களுக்கு அமைப்பின் பொதுச்செயலர் ஆர். சத்தியமூர்த்தி ரொக்கப் பரிசுகளும், கோப்பைகளும் வழங்கிப் பாராட்டினார். பொருளாளர் பி. பால்குமார், துணைத் தலைவர் வி. பிரதீப், இணைச் செயலர் ஏ. பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.