ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்: காலிறுதிக்கு முன்னேறிய இந்திய வீரர்கள் இவர்கள்தான்...
ஆசிய பாட்மிண்டன் சாம்பியன் போட்டியின் காலிறுதிக்கு இந்தியாவின் சாய்னா, பி.வி.சிந்து, பிரணாய், ஸ்ரீகாந்த் ஆகியோர் முன்னேறி உள்ளனர்.
ஆசிய பாட்மிண்டன் சாம்பியன் போட்டி சீனாவின் வுஹான் நகரில் நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து சிறப்பாக ஆடி வருகின்றனர்.
ஒலிம்பிக் வெண்கலப் பதக்கம் வென்ற சாய்னா 21-18, 21-8 என்ற செட் கணக்கில் சீனாவின் கவ் பஞ்சியை எளிதாக வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
காலிறுதியில் சாய்னா, கொரியாவின் லி ஜங் மியை எதிர்கொள்கிறார்.
அதேபோன்று, மூன்றாம் நிலை வீராங்கனையான பி.வி.சிந்து 21-12, 21-15 என்ற செட் கணக்கில் சீனாவின் சென் ஜியானை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு பிரிவான ஆடவர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஹாங்காங்கின் வொங் விங் கி காயமுற்று வெளியேறியதால் ஸ்ரீகாந்த் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.
காலிறுதியில் ஒலிம்பிக்கில் மூன்று முறை வெள்ளிப் பதக்கம் வென்ற லீ சொங் வெய்யை எதிர்கொள்கிறார் ஸ்ரீகாந்த்.
அதேபோன்று பிரணாய் 16-21, 21-14, 21-12 என்ற செட் கணக்கில் சீன தைப்பேவின் வாங் சு வெயை வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
பிரணாய், கொரியாவின் சன் வான் ஹோவை காலிறுதியில் சந்திக்கிறார்.