ashwin practicing leg spin to get place again in indian team

இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ள சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், மீண்டும் அணியில் இடம்பெறுவதற்காக லெக் ஸ்பின்னராக மாறிவருகிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

மகேந்திர சிங் தோனி கேப்டனாக இருந்தபோது, சுழற்பந்துவீச்சில் அவரது முதல் தேர்வாக இருந்தவர் தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின். இருவருக்கும் இடையே இருக்கும் புரிந்துணர்வு, மைதானத்தில் வெளிப்படுவதை அவ்வப்போது பார்த்திருக்க முடியும்.

ஆனால், கடந்த சாம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகு, இந்திய அணியில் லெக் ஸ்பின்னர்களுக்கும் மணிக்கட்டை சுழற்றி வீசும் சுழற்பந்து வீச்சாளர்களுக்குமே வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது. அதனால்தான் ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் ஆகியோர் ஓரங்கட்டப்பட்டு சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அணியில் இடம்பிடிக்காத இந்த 4 மாதங்களில், லெக் ஸ்பின் போட்டு பயிற்சி எடுத்து வருகிறார் அஸ்வின். அடுத்ததாக நடைபெற உள்ள தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிக்காக தீவிரமாக அஸ்வின் தயாராகி வருகிறார்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற விஏபி டிராபி போட்டியில் கிராண்ட் ஸ்லாம் அணிக்கு எதிராக விளையாடிய அஸ்வின், தான் வீசிய 9 ஓவர்களில், 6 ஓவர்களை லெக் ஸ்பின்னாக வீசியுள்ளார். அதில் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். தன்னை ஓரங்கட்டிய இந்திய அணிக்கு, தன்னால் இரண்டு விதமான ஸ்பின் பவுலிங்கையும் போட முடியும் என நிரூபித்து மீண்டும் அணியில் இடம்பெறுவதற்காக தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார் அஸ்வின். 

ஆனால், தற்போதைய இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களாக இருக்கும் சாஹலும் குல்தீப்பும் சிறப்பாக வீசிவருகின்றனர்.

அவர்களை பின்னுக்குத்தள்ளி மீண்டும் அஸ்வின் அணியில் இடம்பிடிக்கிறாரா? அவரது முயற்சி எந்த அளவிற்கு பலனளிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..