கேப்டனாக அசத்தும் தமிழன்.. கடைசி ஓவரை முஜீபுர் ரஹ்மானிடம் கொடுத்தது ஏன்..? அஸ்வின் விளக்கம்
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் டெல்லி அணியை கடைசி பந்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி திரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கடைசி ஓவரை முஜீபுர் ரஹ்மானிடம் கொடுத்தது தொடர்பாக பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் விளக்கமளித்துள்ளார்.
ஐபிஎல் 11வது சீசன் கடந்த 7ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் இரண்டு தமிழக வீரர்கள் கேப்டன்களாக செயல்படுகின்றனர். கொல்கத்தா அணிக்கு தினேஷ் கார்த்திக்கும் பஞ்சாப் அணிக்கு அஸ்வினும் கேப்டன்களாக செயல்படுகின்றனர்.
அதிலும் கேப்டனாக அஸ்வினின் செயல்பாடு, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சோதனை முயற்சிகள், சமயோசித முடிவுகள், வியூகங்கள் என கேப்டனாக அஸ்வின் அசத்திவருகிறார். இதுவரை ஆடியுள்ள 6 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் அஸ்வினின் பஞ்சாப் அணி முதலிடத்தில் உள்ளது.
நேற்றைய போட்டியிலும் அஸ்வினின் சோதனை வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, வெறும் 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. 144 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி, அதையே எடுக்க முடியாமல், 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அந்த அணியில் ஷ்ரேயாஸ் ஐயரை தவிர மற்ற யாரும் சோபிக்கவில்லை. அவர் மட்டுமே அரைசதம் அடித்தார்.
கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட, அந்த ஓவரை ஸ்பின் பவுலரான முஜீபுர் ரஹ்மானிடம் கொடுத்தார் அஸ்வின். அந்த ஓவரை எதிர்கொண்ட ஷ்ரேயாஸ் ஐயர், 12 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதையடுத்து பஞ்சாப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
போட்டிக்கு பின்னர் பேசிய பஞ்சாப் கேப்டன் அஸ்வின், இந்தப் போட்டியிலும் வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. கடைசி ஓவரை முஜிப்பிடம் கொடுத்தது ஏன் என்று கேட்கிறார்கள். எல்லோரும் ஆலோசித்தோம். இந்தப் போட்டியில் ஆண்ட்ரூ டை நன்றாக பந்துவீசினார். இதில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று தீவிரமாக நினைத்தோம். இதனால் புதிய முயற்சியாக முஜிப்பிடம் கடைசி ஓவரை கொடுத்தோம். பிட்சில் பந்து சறுக்கியது. அவர்கள் அழுத்தம் காரணமாக அடித்து ஆட நினைத்தார்கள். அது எங்களுக்கு விக்கெட்டாக மாறியது என்றார்.