As the champion wins it is important that the opposition to the crisis
சாம்பியன் வெல்வது இந்தியாவுக்கு சாத்தியமே. அதேபோன்று எதிரணிக்கு நெருக்கடியை கொடுப்பது மிக முக்கியம் என முன்னாள் இந்திய கேப்டனான கபில்தேவ் தெரிவித்தார்.
இலண்டனில் உள்ள மேடம் துஸாட்ஸ் அருங்காட்சியகத்தின் கிளை டெல்லியில் அமைக்கப்பட்டுள்ளது. அது விரைவில் திறக்கப்படவுள்ள நிலையில், அங்கு கபில்தேவின் மெழுகுச் சிலை திறக்கப்பட்டுள்ளது. அதை நேற்று கபில்தேவ் பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
தர்மசாலாவில் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டியை பார்த்தீர்களா? அப்போது கோலி விளையாடாவிட்டால் இந்திய அணி தோற்கும் என எல்லோரும் கூறினார்கள். ஆனால், அதில் என்ன நடந்தது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
கோலி சிறப்பாக ஆடினால் மட்டுமே இந்தியாவால் வெற்றி பெற முடியும் என நினைத்துக் கொண்டு மற்றவர்களை குறைத்து மதிப்பிடுவது நியாயமற்றது.
இந்திய அணியில் கோலி முக்கியமான வீரர்தான். தலைசிறந்த வீரரான அவருக்கு எப்படி விளையாட வேண்டும், எப்போது விளையாட வேண்டும் என்பது தெரியும்.
இந்திய அணி நல்ல நிலையில்தான் இருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளாகவே இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. போட்டி நடைபெறும் தினத்தில் அவர்கள் தங்களின் வியூகத்தை எப்படி செயல்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்தே வெற்றி வாய்ப்பு அமையும்.
சாம்பியன்ஸ் டிராபியை வெல்லும் தகுதி நிச்சயம் இந்திய அணிக்கு இருக்கிறது. அதேநேரத்தில் எதிரணிக்கு நெருக்கடியை கொடுப்பது மிக முக்கியமானதாகும்.
ஒரு பெளலர் மட்டும் சிறப்பாக செயல்பட்டால் போதாது. அனைவரும் ஓர் அணியாக இணைந்து செயல்பட்டால்தான் வெற்றி கிடைக்கும். யாராவது ஒரு பெளலர் முன்னின்று வழி நடத்தலாம். ஆனால், அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு விக்கெட்டுகளை வீழ்த்தும்போதுதான் அதிக அளவில் வெற்றிகளைப் பெற முடியும்.
இப்போதுள்ள இளம் வீரர்கள், எங்களைவிட அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். நாங்கள் அமெச்சூர் வீரர்கள். ஆனால் இன்றைய தலைமுறையினர் தொழில்முறை வீரர்கள்.
தற்போதைய நிலையில் என்னைவிட சிறந்த ஆல்ரவுண்டர்கள் 100 பேர் இந்தியாவில் இருக்கிறார்கள். ஆனால, அவர்களில் யாரும் வேகப்பந்து வீச்சாளர்களாக இல்லை. அஸ்வின், ஜடேஜா ஆகிய இருவருமே இந்தியாவுக்கு கிடைத்த சிறந்த ஆல்ரவுண்டர்கள்தான். தற்போதைய நிலையில் இந்திய அணியில் போதுமான ஆல்ரவுண்டர்கள் இருப்பதாகவே நினைக்கிறேன்' என்று தெரிவித்தார்.
