மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கிறார் சுஷில் குமார்...
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க போகிறேன் என்று இந்திய வீரர் சுஷில் குமார் தெரிவித்துள்ளார்.
டிபிலிஸி, ஜார்ஜியா உள்ளிட்ட நாடுகளில் பயிற்சி மேற்கொண்டிருந்த சுஷில் குமார் இதற்காக இந்தியா திரும்பியுள்ளார். அத்துடன் 74 கிலோ எடைப் பிரிவுக்கான தேர்வுப் போட்டியில் தேசிய ஜூனியர் சாம்பியன் தினேஷை வீழ்த்தி தேசிய சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து, "உடல் மற்றும் மனதளவில் தற்போது முழுதகுதியுடன் இருக்கும் நான், போட்டிகளில் திருப்தியுடன் பங்கேற்று வருகிறேன்' என்றார் சுஷில் குமார் .
இதனிடையே, 74 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்கும் மற்றொரு வீரரான பிரவீண் ராணா, தேர்வுப் போட்டியில் பங்கேற்கவில்லை. இந்நிலையில், தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தான் பங்கேற்கவில்லை என்று யோகேஷ்வர் தத் தெரிவித்துள்ளார்.
எனினும், இப்போட்டியில் ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சாக்ஷி மாலிக், கீதா போகத், வினேஷ் போகத் ஆகியோர் பங்கேற்கின்றனர் என்பது கொசுறு தகவல்.