45வது செஸ் ஒலிம்பியாட் ஹங்கேரி நாட்டில் நடக்கிறது..! செஸ் கூட்டமைப்பின் கொடி ஹங்கேரியிடம் ஒப்படைப்பு
44வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில், 45வது செஸ் ஒலிம்பியாட் ஹங்கேரி நாட்டில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டதுடன், செஸ் மரபுப்படி, சர்வதேச செஸ் கூட்டமைப்பின் கொடி ஹங்கேரி நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டது.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்தது. வெறும் 4 மாதங்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை மிகச்சிறப்பாக செய்து, செஸ் ஒலிம்பியாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறது தமிழக அரசு.
186 நாடுகளை சேர்ந்த 2500 வீரர், வீராங்கனைகளுக்கும் தங்கும் வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து, அவரவர் நாட்டு உணவுகளை சமைத்து கொடுத்து சிறப்பாக உபசரித்து, சர்வதேசத்தையே வியக்கவைத்தது தமிழக அரசு.
சர்வதேச வீரர்கள், வீராங்கனைகள் அனைவரும் தமிழக அரசின் ஏற்பாடுகளையும், உபசரிப்பையும் மெச்சினர். உலகமே தமிழகத்தை வியந்து பார்த்தது.
இன்றுடன் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், தொடக்க விழாவை போலவே நிறைவு விழாவையும் மிக பிரம்மாண்டமாக சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடத்தி முடித்தது தமிழக அரசு.
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா முடியும்போது, 45வது செஸ் ஒலிம்பியாட்டை நடத்துவது ஹங்கேரி நாடு என்று அறிவிக்கப்பட்டு, செஸ் மரபுப்படி, சர்வதேச செஸ் கூட்டமைப்பின் கொடி ஹங்கேரியிடம் வழங்கப்பட்டது.