Asianet News TamilAsianet News Tamil

அந்த சீனியர் வீரருக்கு இனிமேல் இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்க வாய்ப்பே இல்லை..! ஜாகீர் கான் அதிரடி

அஜிங்க்யா ரஹானே இனிமேல் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெறுவது மிகக்கடினம் என்று ஜாகீர் கான் கருத்து கூறியுள்ளார்.
 

zaheer khan opines ajinkya rahane unlikely to get place in india test team again
Author
Chennai, First Published Dec 4, 2021, 9:28 PM IST

இந்திய டெஸ்ட் அணியின் சீனியர் வீரர் அஜிங்க்யா ரஹானே. டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக இருந்துவரும் ரஹானே, டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் நட்சத்திர வீரராகவும் திகழ்ந்தார்.

இந்திய அணிக்காக 78 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள அஜிங்க்யா ரஹானே, 12 சதங்கள் மற்றும் 24 அரைசதங்களுடன் 4756 ரன்களை குவித்துள்ளார். விராட் கோலி ஆடாத போட்டிகளில் கேப்டனாக இருந்து இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி வெற்றிகளை பெற்றுக்கொடுத்திருக்கிறார்.

2020-2021 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில், முதல் டெஸ்ட்டில் மட்டும் ஆடிவிட்டு விராட் கோலி இந்தியா திரும்பிவிட, அந்த தொடரில் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி தொடரை வென்றவர் ரஹானே.

ஆனால் அண்மைக்காலமாக படுமோசமாக பேட்டிங் ஆடிவந்த அஜிங்க்யா ரஹானே மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. கடைசி 20 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் ரஹானே அடித்த ரன்கள்: 4, 37, 24, 1, 0, 67, 10, 7, 27, 49, 15, 5, 1, 61, 18, 10, 14, 0, 35, 4.

ரஹானே கடைசி 20 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் வெறும் இரண்டே அரைசதங்கள் மட்டுமே அடித்துள்ளார். அதையும் பெரிய இன்னிங்ஸாக மாற்றவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டிலேயே அவரை சேர்க்க வேண்டாம் என்ற கருத்து இருந்தது. ஆனால் கோலி ஆடாததால், அவர் தான் கேப்டன்சி செய்ய வேண்டும் என்பதால், அவர் ஆடவைக்கப்பட்டார். ஆனால் அந்த போட்டியிலும் 35 மற்றும் 4 ரன்கள் மட்டுமே அடித்தார்.

அவர் சொதப்பிய அதேவேளையில், ஷ்ரேயாஸ் ஐயர் அவருக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அறிமுக டெஸ்ட்டிலேயே சதமும் அரைசதமும் அடித்தார். இன்னும் ஹனுமா விஹாரி இருக்கிறார். அவரும் வந்தால் டெஸ்ட் அணியில் வீரர்களுக்கு இடையேயான போட்டி மிகக்கடுமையாக உள்ளது.

இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியிலேயே ரஹானே நீக்கப்பட்டார். எனவே அப்படியே இந்திய அணியிலிருந்து ஒட்டுமொத்தமாக ரஹானே ஓரங்கட்டப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்துக்கான இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்படுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. எனவே ரஹானே மொத்தமாக ஓரங்கட்டப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ரஹானேவிற்கு மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைப்பது குறித்து பேசியுள்ளார் ஜாகீர் கான். இதுகுறித்து பேசிய ஜாகீர் கான், அணியிலிருந்து நீக்கப்பட்டால் மீண்டும் அணியில் இணையமுடியாது என்றெல்லாம் இல்லை. ஆனால் இந்திய அணியில் இப்போதிருக்கும் பென்ச் வலிமையை பார்க்கும்போது, மீண்டும் கம்பேக் கொடுப்பது மிகக்கடினம். உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாக ஆடிய வீரர்கள் இந்திய அணியில் தங்களுக்கான இடத்தை எதிர்நோக்கி வரிசைகட்டி நிற்கின்றனர். எனவே இப்போது, இந்திய அணியில் நிரந்தரமாக ஆடவேண்டுமென்றால், தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியாக வேண்டும் என்று ஜாகீர்கான் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios