#T20WorldCup கோலியின் ஆஸ்தான வீரருக்கு இந்திய அணியில் இடம் இல்லை..! வேற 2 டி20 வீரர்களும் ஓரங்கட்டப்பட்டனர்
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் கோலியின் ஆஸ்தான வீரருக்கு இடம் கிடைக்கவில்லை. ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் சாஹர் ஆகியோருக்கும் அணியில் இடம் இல்லை.
டி20 உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடக்கிறது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவரும் நிலையில், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி:
விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா(துணை கேப்டன்), கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), இஷன் கிஷன்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், ரவிச்சந்திரன் அஷ்வின், அக்ஸர் படேல், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி.
கோலி தலைமையிலான இந்திய அணியில் ஒரு மிகப்பெரிய சர்ப்ரைஸான தேர்வு என்றால் அது, சீனியர் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின் தான். 2017ம் ஆண்டு கடைசியாக டி20 கிரிக்கெட்டில் ஆடிய அஷ்வின், அதன்பின்னர் கடந்த 4 ஆண்டுகளாக டி20 அணியில் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், 4 ஆண்டுகளுக்கு பிறகு டி20 அணியில் அஷ்வின் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஸ்பின்னர்களாக அஷ்வின், ஜடேஜா, ராகுல் சாஹர், அக்ஸர் படேல் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் எடுக்கப்பட்டுள்ளனர். ஐபிஎல்லில் கோலி கேப்டனாக செயல்படும் ஆர்சிபி அணியிலும், 2017லிருந்து கோலி தலைமையிலான இந்திய அணியிலும் அவரது ஆஸ்தான ஸ்பின்னராக திகழ்ந்த ரிஸ்ட் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹலுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.
டி20 கிரிக்கெட்டில் கடந்த 2 ஆண்டுகளாக 4ம் வரிசையில் ஆடிவந்த ஷ்ரேயாஸ் ஐயருக்கு டி20 உலக கோப்பைக்கான அணியில் இடம் கிடைக்கவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் தோள்பட்டையில் காயமடைந்து அந்த தொடரிலிருந்து பாதியில் விலகிய ஷ்ரேயாஸ் ஐயர் அப்படியே ஓரங்கட்டப்பட்டுள்ளார்.
அதேபோல ஃபாஸ்ட் பவுலர் தீபக் சாஹருக்கும் டி20 உலக கோப்பைக்கான அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.