வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் வரலாறு படைக்க காத்திருக்கும் கோலி
வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி, அபாரமான ஒரு சாதனையை படைக்க காத்திருக்கிறார்.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் பல சாதனைகளை குவித்துவருகிறார். சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக திகழும் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார்.
பேட்டிங்கில் ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவது ஒரு சாதனையை முறியடித்து வந்த கோலி, தற்போது கேப்டன்சியிலும் பல சாதனைகளை முறியடித்து புதிய மைல்கற்களை எட்டிவருகிறார்.
அந்தவகையில், வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் கோலி ஒரு மைல்கல்லை எட்டவுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக விராட் கோலி 4968 ரன்களை இதுவரை அடித்துள்ளார். இன்னும் 32 ரன்கள் அடித்தால், கேப்டனாக 5000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிவிடுவார்.
இதில் என்ன ஸ்பெஷல் என்றால், கேப்டனாக 5000 டெஸ்ட் ரன்களை கடக்கும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையை கோலி பெறுவார். க்ரேம் ஸ்மித், ஆலன் பார்டர், ரிக்கி பாண்டிங், கிளைவ் லாயிட், ஸ்டீஃபன் ஃப்ளெமிங் ஆகியோருக்கு அடுத்து இந்த மைல்கல்லை எட்டும் ஆறாவது வீரர் என்ற சாதனையையும் கோலி படைப்பார். அதற்கு இன்னும் 32 ரன்கள் மட்டுமே கோலிக்கு தேவை. அதை வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் கண்டிப்பாக விராட் கோலி அடித்து, இந்த மைல்கற்களை எட்டிவிடுவார்.