ஆண்டவா... ஆஸ்திரேலிய தொடரில் சதமா அடிக்கணும்..! ரிஷிகேஷில் மனைவி அனுஷ்கா சர்மாவுடன் விராட் கோலி சாமி தரிசனம்
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, அவரது மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் மகள் வாமிகாவுடன் ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்தா கிரி ஆசிரமத்தில் தரிசனம் செய்தார்.
சமகாலத்தின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான விராட் கோலி, 2019 நவம்பருக்கு பின் 3 ஆண்டுகளாக சதமே அடிக்காமல் திணறிவந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த ஆசிய கோப்பையில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் சதமடித்து, மீண்டும் தனது சத கணக்கை தொடங்கினார்.
அதன்பின்னர் சதங்களாக விளாசி தனது சாதனை பயணத்தை மீண்டும் தொடங்கிவிட்டார். ஒருநாள் கிரிக்கெட்டில் 46 சதங்களுடன் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை நெருங்கும் விராட் கோலி, டெஸ்ட்டில் 27 சதங்கள், டி20 கிரிக்கெட்டில் ஒரு சதம் என மொத்தமாக 74 சதங்களுடன் சச்சின் டெண்டுல்கரின் 100 சத சாதனையை விரட்டுகிறார்.
2022 டி20 உலக கோப்பைக்கு பின் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகிய சீனியர் வீரர்கள் டி20 கிரிக்கெட்டில் ஆடவில்லை. அதனால் நியூசிலாந்துக்கு எதிராக நடந்துவரும் டி20 தொடரில் கோலி ஆடவில்லை. ஓய்வில் இருக்கும் விராட் கோலி, அடுத்ததாக ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடருக்காக தயாராகிவருகிறார்.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்னேற, இந்த டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு முக்கியமான தொடர். இந்த முக்கியமான தொடரில் இந்திய அணி ஜெயிக்க வேண்டுமென்றால், விராட் கோலி சிறப்பாக ஆடியாக வேண்டும்.
இந்நிலையில், விராட் கோலி அவரது மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் மகல் வாமிகாவுடன் ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளார். அந்தவகையில், ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்த கிரி ஆசிரமத்திற்கு சென்று அங்கு சாமி தரிசனம் செய்தார். அவர் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் மற்றும் பக்தர்களுடன் எடுத்த செல்ஃபி புகைப்படங்கள் வைரலாகிவருகிறது.