ரூட் நிற்க வச்சா மட்டும் பேட் தனியா நிற்குது.. நாம வச்சா நிற்க மாட்டேங்குது! கோலியின் முரட்டு முயற்சி.. வீடியோ
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது ஜோ ரூட் பேட்டை தனியாக நிற்கவைத்ததை போல, விராட் கோலியும் பேட்டை நிற்கவைக்க முயற்சி செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
இங்கிலாந்து - நியூசிலாந்து இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் நடந்துவருகிறது. முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி 2-0 என டெஸ்ட் தொடரை வென்றுவிட்ட நிலையில், 3வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கி நடந்துவருகிறது.
அடுத்ததாக இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு எதிரான கிரிக்கெட் தொடரில் ஆடுகிறது. அதற்காக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, டெஸ்ட் போட்டிக்கு முன்பாக லெய்செஸ்டெர்ஷைர் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் ஆடிவருகிறது. அந்த போட்டியும் இன்றுதான் தொடங்கியது.
இந்த போட்டியின்போது விராட் கோலி செய்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. ஜோ ரூட்டை போல விராட் கோலியும் செய்ய முயற்சி செய்த சம்பவம் தான் அது.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் பேட்டிங் முனைக்கு எதிர்முனையில் நின்றபோது ஜோ ரூட், அவரது பேட்டை எந்தவித சப்போர்ட்டும் இல்லாமல் தனியாக நிற்கவைத்தார். அந்த வீடியோ அப்போது செம வைரலாகி, ஜோ ரூட் மேஜிக் மேன் என்றெல்லாம் பேசப்பட்டது.
இந்நிலையில், லெய்செஸ்டெர்ஷைர் அணிக்கு எதிராக இந்திய அணி ஆடிவரும் பயிற்சி போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடுகிறது. அப்போது களத்தில் இருந்த விராட் கோலி, ரூட்டை போலவே பேட்டை தனியாக நிற்கவைக்க முயற்சி செய்தார். ஆனால் கோலியின் பேட் நிற்கவில்லை. ரூட் செய்ததை போல விளையாட்டுத்தனமாக விராட் கோலியும் பேட்டை நிற்க வைக்க முயற்சித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
விராட் கோலி மற்றும் ஜோ ரூட் ஆகிய இருவருமே சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் இருவர் ஆவர். விராட் கோலி கடந்த இரண்டரை ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் சதம் கிடைக்காமல் தவித்துவருகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி 27 சதங்கள் அடித்துள்ள நிலையில், அந்த மைல்கல்லை அண்மையில் தான் ரூட் சமன் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.