Venkateh Iyer: பேட்டிங்கில் சதம்.. பவுலிங்கில் 2 விக்கெட்..! பாண்டியாவிற்கு பயம் காட்டும் வெங்கடேஷ் ஐயர்
விஜய் ஹசாரே தொடரில் சண்டிகர் அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே அபாரமாக செயல்பட்டு மத்திய பிரதேச அணியின் வெற்றிக்கு உதவினார் வெங்கடேஷ் ஐயர்.
விஜய் ஹசாரே டிராபி கடந்த 8ம் தேதி முதல் நடந்துவருகிறது. இந்த தொடரில் இளம் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் சிறப்பாக ஆடிவருகின்றனர்.
மத்திய பிரதேசம் மற்றும் சண்டிகர் அணிக்கு இடையேயான போட்டியில் மத்திய பிரதேச வீரரான வெங்கடேஷ் ஐயர் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே அபாரமாக செயல்பட்டு மத்திய பிரதேச அணியின் வெற்றிக்கு உதவினார்.
மத்திய பிரதேச அணி முதலில் பேட்டிங் ஆடியது. 6ம் வரிசையில் பேட்டிங் ஆடிய வெங்கடேஷ் ஐயர் அதிரடியாக பேட்டிங் ஆடி சதமடித்தார். 113 பந்தில் 8 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களுடன் 151 ரன்களை குவித்தார். அவரது அதிரடியான பேட்டிங்கால் 50 ஓவரில் 331 ரன்களை குவித்த மத்திய பிரதேச அணி, சண்டிகர் அணியை 326 ரன்களுக்கு சுருட்டி 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேட்டிங்கில் அசத்திய வெங்கடேஷ் ஐயர் பவுலிங்கும் சிறப்பாக வீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஐபிஎல்லில் கேகேஆர் அணிக்காக சிறப்பாக ஆடியதன் மூலம், இந்திய டி20 அணியில் இடம்பிடித்து நியூசிலாந்துக்கு எதிராக ஆட வாய்ப்பு பெற்ற வெங்கடேஷ் ஐயர், ஒருநாள் கிரிக்கெட்டிலும் சிறப்பாக ஆடுவதன் மூலம், ஹர்திக் பாண்டியாவின் இடத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கிறார். இந்திய அணியில் ஆல்ரவுண்டருக்கான இடம் காலியாக இருக்கிறது. ஹர்திக் பாண்டியா கடந்த சில ஆண்டுகளாக சரியாக ஆடுவதில்லை. அவரது ஃபிட்னெஸும் சிறப்பாக இல்லை. அடிக்கடி காயங்களால் அவதிப்பட்டுவருகிறார். இந்நிலையில், இந்திய அணியில் ஒரு தரமான ஆல்ரவுண்டருக்கான தேவை இருக்கும் நிலையில், அந்த இடத்தை பிடிக்க வெங்கடேஷ் ஐயருக்கு பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது.
எனவே ஹர்திக் பாண்டியா இனிமேல் இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டுமென்றால் மிகக்கடுமையாக உழைக்க வேண்டும்.
அதேபோல, ருதுராஜ் கெய்க்வாட்டும் அவரை தேர்வாளர்கள் புறக்கணிக்கமுடியாதபடி தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார்.