பொல்லார்டு மற்றும் டிம் சேஃபெர்ட்டின் பொறுப்பான பேட்டிங்கால், 20 ஓவரில் 158 ரன்கள் அடித்த டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி, 159 ரன்கள் என்ற சவாலான இலக்கை செயிண்ட் லூசியா கிங்ஸ் அணிக்கு நிர்ணயித்துள்ளது. 

கரீபியன் பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. செயிண்ட் லூசியா கிங்ஸ் மற்றும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி செயிண்ட் கிட்ஸில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லூசியா கிங்ஸ் அணி, நைட் ரைடர்ஸை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க வீரர் லெண்டல் சிம்மன்ஸ் 11 ரன்னிலும், மற்றொரு தொடக்க வீரரான சுனில் நரைன் 24 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். வெப்ஸ்டெர் 14 ரன்னில் ஆட்டமிழந்தார். காலின் முன்ரோவும் ஒரு ரன்னில் நடையை கட்ட, 12 ஓவரில் 68 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி.

அதன்பின்னர் கேப்டன் பொல்லார்டும் டிம் சேஃபெர்ட்டும் இணைந்து பொறுப்புடன் பேட்டிங் ஆடினர். அதேவேளையில் அடித்தும் ஆடினர். இருவரும் இணைந்து 5வது விக்கெட்டுக்கு 78 ரன்களை சேர்த்தனர். அதிரடியாக ஆடிய கேப்டன் பொல்லார்டு 29 பந்தில் 41 ரன் அடித்து ஆட்டமிழந்தார். டிம் சேஃபெர்ட் 25 பந்தில் 37 ரன் அடித்து ஆட்டமிழந்தார். 

இவர்கள் இருவரின் பொறுப்பான பேட்டிங்கால் 20 ஓவரில் 158 ரன்கள் அடித்த நைட் ரைடர்ஸ் அணி, 159 ரன்களை செயிண்ட் லூசியா கிங்ஸ் அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.