2வது போட்டியில் அந்த மாற்றம் கண்டிப்பா இருக்காது!! உத்தேச இந்திய அணி
5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில் நாளை இரண்டாவது போட்டி நடக்கிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி நாளை நடக்கிறது.
முதல் போட்டியில் தோனி மற்றும் கேதர் ஜாதவின் பொறுப்பான பேட்டிங்கால் இந்திய அணி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தோனி மற்றும் கேதர் ஜாதவ் ஆகிய சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தனர். ஆஸ்திரேலியாவிடமிருந்து வெற்றியை பறித்து தொடரில் முன்னிலை வகிக்க செய்தனர்.
5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில் நாளை இரண்டாவது போட்டி நடக்கிறது. இரண்டாவது போட்டியில் இந்திய அணியில் மாற்றங்கள் எதுவும் செய்யப்பட வாய்ப்பில்லை.
ராகுலுக்கு இந்த தொடரில் வாய்ப்புகள் வழங்கப்படும். ஆனால் இரண்டாவது போட்டியில் ராகுலுக்கு வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு இல்லை. ஏனெனில் தவான் கடந்த சில போட்டிகளில் திணறிவருகிறார். டி20 போட்டியில் சரியாக ஆடாத நிலையில், முதல் ஒருநாள் போட்டியிலும் சரியாக ஆடவில்லை. அதனால் அவர் மீண்டும் நம்பிக்கை பெற ஒரு சிறந்த இன்னிங்ஸ் ஆட வேண்டிய அவசியம் இருப்பதால், அவர் இரண்டாவது போட்டியில் கண்டிப்பாக ஆடுவார்.
விஜய் சங்கர், ஜடேஜா ஆகியோரும் இரண்டாவது போட்டியில் கண்டிப்பாக ஆடுவார்கள். ஜடேஜா முதல் போட்டியில் ரன்களை வாரி வழங்காமல் கட்டுக்கோப்பாக வீசினார். விக்கெட் வீழ்த்தவில்லை என்றாலும் ரன்களை கட்டுப்படுத்தினார். விஜய் சங்கருக்கு பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர் பவுலிங்கும் சரியாக வீசவில்லை. ஆனால் அதற்காக அவர் நீக்கப்பட வாய்ப்பில்லை. ஆல்ரவுண்டர் என்ற வகையில் அவர் கண்டிப்பாக அணியில் இருப்பார்.
இரண்டாவது போட்டிக்கான உத்தேச இந்திய அணி:
ரோஹித், தவான், கோலி(கேப்டன்), ராயுடு, தோனி(விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், விஜய் சங்கர், ஜடேஜா, குல்தீப், பும்ரா, ஷமி.