India vs South Africa: மேட்ச்சும் போச்சு; காசும் போச்சு..! ஊதியத்தில் 40%-ஐ அபராதமாக கட்டிய இந்திய வீரர்கள்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக இந்திய வீரர்களின் ஊதியத்தில் 40 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்து 3-0 என தொடரை வென்றது தென்னாப்பிரிக்க அணி.
இந்த தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்று தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி ஒருநாள் போட்டி நேற்று கேப்டவுனில் நடந்தது. இந்த போட்டியிலும் வெற்றி பெற்று இந்தியாவை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் தென்னாப்பிரிக்க அணியும், ஆறுதல் வெற்றியாவது பெறும் முனைப்பில் இந்திய அணியும் களமிறங்கின.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணி, டி காக்கின் அதிரடி சதத்தால் (124) 287 ரன்களை குவித்தது. 288 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி, 210 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், அதன்பின்னர் அதிரடியாக ஆடி தனி நபராக போராடிய தீபக் சாஹர் 34 பந்தில் 54 ரன்களை விளாசி, இந்திய அணியின் வெற்றிக்கு 17 பந்தில் 10 ரன் மட்டுமே தேவை என்ற நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் டெயிலெண்டர்கள் ஆட்டமிழக்க, இந்திய அணி 283 ரன்கள் மட்டுமே அடித்து 4 ரன் வித்தியாசத்தில் தோற்றது.
இந்திய அணியை 3-0 என ஒயிட்வாஷ் செய்து தென்னாப்பிரிக்க அணி தொடரை வென்றது.
இந்த போட்டியில் பந்துவீச அதிகநேரம் எடுத்துக்கொண்டதற்காக இந்திய வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தாமதமாக வீசப்படும் ஒவ்வொரு ஓவருக்கு வீரர்களின் ஊதியத்தில் 20 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்படும். இந்திய அணி 2 ஓவர்கள் தாமதமாக வீசியதால் வீரர்களுக்கு அவர்களது ஊதியத்தில் 40 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.