மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் 5 ரன்களில் ஆர்சிபி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து டாடா நிறுவனம் உடைந்த கார் கண்ணாடியை ஆர்சிபி வீராங்கனை எல்லிஸ் பெர்ரிக்கு பரிசாக கொடுத்துள்ளது.
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசனின் எலிமினேட்டர் போட்டி நேற்று நடந்தது. இதில், மும்பை இந்தியன்ஸ் மகளிர் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மகளிர் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆர்சிபி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷோஃபி டிவைன் இருவரும் முதலில் களமிறங்கி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இவர்களுக்கு பிறகு வந்த எல்லீஸ் பெர்ரி மட்டும் நிதானமாக விளையாடி ரன்கள் குவித்தார். அவர், 50 பந்துகளில் 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 66 ரன்கள் எடுத்தார். இதில், யுபி வாரியர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியின் போது அவர் அடித்த சிக்ஸர் ஒன்று பவுண்டரி எல்லைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் விண்டோ கண்ணாடியை சுக்கு நூறாக நொறுக்கியது.
அப்போது கார் கண்ணாடி உடைந்ததற்கு தன்னிடம் இன்சூரன்ஸ் இல்லை என்பது போன்று கூறி சிரித்துள்ளார். இந்த நிலையில் தான் அந்த உடைந்த கார் கண்ணாடியை எலிலிஸ் பெர்ரிக்கு பரிசாகவே டாடா நிறுவனம் அளித்துள்ளது. இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தப் போட்டியில் ஆர்சிபி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் வந்த மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணியானது சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. கடைசி பந்தில் வெற்றிக்கு 7 ரன்கள் தேவையிருந்த நிலையில் ஒரு ரன் மட்டுமே எடுக்கப்படவே மும்பை 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இதன் மூலமாக ஆர்சிபி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நாளை நடக்கும் இறுதிப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. கடந்த சீசனில் டெல்லியுடன் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடியது. இதில் மும்பை வெற்றி பெற்று சாம்பியனானது. இந்த முறை டெல்லியா? பெங்களூரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
