மரண மாஸ் காட்டிய தமிழ்நாடு அணி.. 12 ஓவரில் சோலியை முடித்த தரமான சம்பவம்
விதர்பா அணிக்கு எதிரான விஜய் ஹசாரே போட்டியில் வெறும் 12 ஓவரில் இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது தமிழ்நாடு அணி.
விஜய் ஹசாரே தொடரில் தமிழ்நாடு மற்றும் விதர்பா அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று இந்தூரில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று ஃபீல்டிங்கை தேர்வு செய்த தமிழ்நாடு அணி, முதலில் பேட்டிங் ஆடிய விதர்பா அணியை வெறும் 150 ரன்களுக்கு சுருட்டியது.
விதர்பா அணியின் விக்கெட் கீப்பர் அக்ஷய் வத்கர் அதிகபட்சமாக 31 ரன்னும், தொடக்க வீரர் சஞ்சய் ரகுநாத் 28 ரன்னும் அடித்தனர். மற்ற அனைவருமே பதின்களில் ஆட்டமிழந்ததால் 42வது ஓவரிலேயே வெறும் 150 ரன்களுக்கு சுருண்டது விதர்பா அணி. தமிழ்நாடு அணி சார்பில் பாபா அபரஜித், கௌசிக் மற்றும் எம் முகமது ஆகிய மூவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
151 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய தமிழ்நாடு அணி விரைவில் போட்டியை முடிக்க நினைத்தது. அதனால் தமிழ்நாடு வீரர்கள் களத்தில் இறங்கியது முதலே அடித்து ஆட ஆரம்பித்தனர். தொடக்க வீரராக கேப்டன் தினேஷ் கார்த்திக் 14 பந்தில் 19 ரன்கள் அடிக்க, ஜெகதீசன் 18 பந்தில் தலா 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 48 ரன்களை விளாசினார். எம் முகமது அதிரடியாக ஆடி 14 பந்தில் 37 ரன்களை விளாச, 12வது ஓவரிலேயே இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தமிழ்நாடு அணி.