பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் தனது பேட்டிங் ஆர்டரில் இஷான் கிஷன் இறங்கியது ஏன்..? சூர்யகுமார் விளக்கம்
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் தனது பேட்டிங் ஆர்டரான 3ம் வரிசையில் இஷான் கிஷன் இறக்கப்பட்டது ஏன் என்று சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி, ரோஹித் சர்மா அரைசதம்(63) அடித்தும் கூட, 20 ஓவரில் வெறும் 131 ரன்கள் மட்டுமே அடித்தது. 132 ரன்கள் என்ற எளிய இலக்கை பஞ்சாப் கிங்ஸ் அணி அசால்ட்டாக அடித்து அபார வெற்றி பெற்றது.
தொடக்க வீரர் குயிண்டன் டி காக் அவுட்டான பின்னர், மும்பை அணியின் வழக்கமான 3ம் வரிசை வீரர் சூர்யகுமார் யாதவ் 3ம் வரிசையில் பேட்டிங் ஆட வராமல், இஷான் கிஷன் வந்தார். முதல் 4 போட்டிகளில் அபாரமாக ஆடியிருந்த சூர்யகுமார் இறக்கப்படாமல், முதல் 4 போட்டிகளில் சோபிக்காத இஷான் கிஷன் 3ம் வரிசையில் பேட்டிங் ஆட வந்தார்.
ஆனால் பவர்ப்ளேயில் பெரிய ஷாட்டுகளை ஆடி வேகமாக ஸ்கோர் செய்யமுடியாமல் திணறிய இஷான் கிஷன், படுமந்தமாக ஆடி 17 பந்தில் வெறும் 6 ரன் மட்டுமே அடித்தார். அதனால் மும்பை அணி பவர்ப்ளேயில் வெறும் 21 ரன்கள் மட்டுமே அடித்தது.
இஷான் கிஷன் வீணடித்த பந்துகளை அதிரடியாக ஆடி சரிசெய்துவிட்டு போகாமல், 17 பந்தில் 6 ரன் அடித்து ஆட்டமிழக்க, அதன்பின்னர் ரோஹித்தும் சூர்யகுமாரும் அடித்து ஆடினாலும் கூட, ஓரளவிற்கு மேல் ஸ்கோரை உயர்த்த முடியவில்லை.
சூர்யகுமார் யாதவ் பவர்ப்ளேயில் களத்திற்கு வந்திருந்தால் அடித்து ஆடி பெரிய ஸ்கோரை அடிக்க உதவியிருப்பார். ஆனால் இஷான் கிஷன் திணறி பந்துகளை வீணடித்துவிட்டார் என்பதால், மும்பை அணியின் இந்த நகர்வு கடும் விமர்சனத்துக்குள்ளானது.
இந்நிலையில், இஷான் கிஷன் 3ம் வரிசையில் இறக்கப்பட்டது குறித்து விளக்கமளித்த சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் 3ம் வரிசையில் இறக்கப்பட்டது முழுக்க முழுக்க அணி நிர்வாகத்தின் முடிவு. ஓபனிங்கில் இடது கை வீரர் ஆட்டமிழந்தால், மற்றொரு இடது கை வீரர் 3ம் வரிசையில் இறக்கப்பட வேண்டும் என்பது திட்டம். அதன்படி, டி காக் ஆட்டமிழந்ததால் இஷான் இறக்கப்பட்டார். நானும் இஷானும் சேர்ந்து நிறைய ஆடியிருக்கிறோம். அவர் 3ம் வரிசையில் இறங்கியதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று சூர்யகுமார் தெரிவித்தார்.