இந்தியாவிற்கு எதிரான 3வது டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவின் காட்டடி சதத்தையும் மீறி, இங்கிலாந்து அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி ஏற்கனவே இந்த தொடரை வென்றுவிட்டதால், இது இங்கிலாந்து அணிக்கு ஆறுதல் வெற்றியே.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி 2-0 என தொடரை வென்றுவிட்ட நிலையில், 3வது டி20 போட்டி டிரெண்ட்பிரிட்ஜில் நடந்தது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலிரண்டு போட்டிகளிலும் டாஸ் வென்று ஃபீல்டிங்கை தேர்வு செய்தார் பட்லர். ஆனால் அந்த 2 போட்டிகளிலும் படுதோல்வியை தழுவியதால், இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷல் படேல், ஆவேஷ் கான், உம்ரான் மாலிக், ரவி பிஷ்னோய்.
இதையும் படிங்க - 2022 டி20 உலக கோப்பையை கண்டிப்பா இந்த அணிதான் வெல்லும்..! ஷாஹித் அஃப்ரிடி ஆருடம்
இங்கிலாந்து அணி:
ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் (கேப்டன், விக்கெட் கீப்பர்), டேவிட் மலான், ஃபிலிப் சால்ட், லியாம் லிவிங்ஸ்டோன், ஹாரி ப்ரூக், மொயின் அலி, டேவிட் வில்லி, கிறிஸ் ஜோர்டான், ரீஸ் டாப்ளி, ரிச்சர்ட் க்ளீசன்.
முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய் மந்தமாக பேட்டிங் ஆடி 26 பந்தில் 27 ரன் மட்டுமே அடித்தார். மற்றொரு தொடக்க வீரரும் கேப்டனுமான ஜோஸ் பட்லர் 9 பந்தில் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
ஃபிலிப் சால்ட் வெறும் 8 ரன்னுக்கு நடையை கட்டினார். ஆனால் அடித்து ஆடி அரைசதம் அடித்த டேவிட் மலான் 39 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 77 ரன்களை குவித்தார். லியாம் லிவிங்ஸ்டோன் 29 பந்தில் 42 ரன்கள் அடித்தார். ஹாரி ப்ரூக் 9 பந்தில் 19 ரன்களும், கிறிஸ் ஜோர்டான் 3 பந்தில் 11 ரன்களும் அடிக்க, 20 ஓவரில் 215 ரன்களை குவித்த இங்கிலாந்து அணி, 216 ரன்கள் என்ற கடினமான இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்தது.
இதையும் படிங்க - சிஎஸ்கேவிலிருந்து வெளியேறுகிறார் ஜடேஜா! சிஎஸ்கே தொடர்பான சமூக வலைதள பதிவுகளை மொத்தமாக நீக்கிய ஜடேஜா
மிகப்பெரிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் தலா 11 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். ரிஷப் பண்ட் வெறும் ஒரு ரன் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். 31 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது இந்திய அணி.
4வது விக்கெட்டுக்கு சூர்யகுமாரும் ஷ்ரேயாஸ் ஐயரும் இணைந்து 119 ரன்களை குவித்தனர். இதில் ஷ்ரேயாஸ் ஐயரின் பங்களிப்பு 28 ரன்கள் மட்டுமே. மற்ற அனைத்து ரன்களும் சூர்யகுமாரே அடித்தார். அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசிய சூர்யகுமார் யாதவ் 48 பந்தில் சதத்தை எட்டினார். தினேஷ் கார்த்திக்கும் 6 ரன்களுக்கும், ஜடேஜா 7 ரன்களுக்கும் நடையை கட்டினர்.
ஆனால் சதமடித்து தனி ஒருவனாக போராடி கிட்டத்தட்ட வெற்றிக்கு அருகில் அழைத்துச்சென்ற சூர்யகுமார் யாதவ், 19வது ஓவரில் 117 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 55 பந்தில் 14 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 117 ரன்களை குவித்தார். அவர் ஆட்டமிழந்ததையடுத்து 20 ஓவரில் 198 ரன்கள் அடித்து இந்திய அணி இன்னிங்ஸை முடிக்க, 17 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி இந்த போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்றது. இந்திய அணி 2-1 என டி20 தொடரை வென்றது.
