சிஎஸ்கே வெளியிட்ட தோனி - ரெய்னா ஃபோட்டோ..! ரெய்னா போட்ட நெகிழ்ச்சி பதிவு
சிஎஸ்கே அணி வெளியிட்ட தோனி - ரெய்னா புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அந்த புகைப்படத்தை டேக் செய்து ரெய்ன நெகிழ்ச்சி பதிவிட்டுள்ளார்.
தோனி மற்றும் ரெய்னா இடையே களத்தில் மட்டுமல்லாது களத்திற்கு வெளியேயும் நல்ல நட்பு இருந்துவருகிறது. தோனி - ரெய்னா இடையேயான புரிதலும் நட்பும் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு அதிகமாக உதவியிருக்கிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல்லில் ரெய்னா ஆடாத நிலையில், கடந்த சீசனில் படுமோசமாக சொதப்பிய சிஎஸ்கே அணி முதல் முறையாக பிளே ஆஃபிற்கு செல்லாமல் லீக் சுற்றுடன் வெளியேறியது.
சிஎஸ்கே அணி நிர்வாகத்துடனான கருத்து வேறுபாட்டால், ரெய்னா கடந்த சீசனில் ஆடாததையடுத்து, தோனி - ரெய்னா நட்பில் விரிசல், இனி ரெய்னா சிஎஸ்கேவில் ஆடமாட்டார் என்றெல்லாம் தகவல் பரவியது. ஆனால் ரெய்னாவை சிஎஸ்கே அணி ஏலத்திற்கு முன் தக்கவைத்தையடுத்து, ரெய்னா சிஎஸ்கேவில் ஆடுவது உறுதியானது.
ரெய்னா சென்னையில் நடந்த சிஎஸ்கே பயிற்சி முகாமில் கலந்துகொண்டு, பின்னர் சிஎஸ்கே அணியுடன் மும்பைக்கு சென்று தோனி உள்ளிட்ட வீரர்களுடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகிறார். தோனியும் ரெய்னாவும் இணைந்து பயிற்சி மேற்கொள்ளவில்லை என்று பேசப்பட்ட நிலையில், தோனி - ரெய்னா இணைந்திருக்கும் புகைப்படத்தை சிஎஸ்கே அணி டுவிட்டரில் வெளியிட்டது.
அந்த புகைப்படத்தை டேக் செய்த ரெய்னா, எப்போதுமே கண்களுக்கு இடையே தொடர்பு இருக்க வேண்டிய அவசியமில்லை. இதயங்களுக்கு இடையேயான தொடர்பு எப்போதுமே வலுவாக இருக்கிறது என்று ரெய்னா நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
தோனி - ரெய்னா இணைந்திருக்கும் புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்திலும் மகிழ்ச்சியிலும் உள்ளனர்.