தற்கால பவுலர்களில் அவரு ஒருவரால் மட்டும்தான் எனக்கு டஃப் கொடுக்க முடியும்..! முன்னாள் ஜாம்பவானின் தரமான தேர்வு
தற்கால பவுலர்களில் தனக்கு யார் கடும் சவாலளிப்பார் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் ஆல்டைம் சிறந்த வீரர்களில் ஒருவர் ஸ்டீவ் வாக். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான அவர், 1999ல் அந்த அணிக்கு உலக கோப்பையை வென்று கொடுத்தார்.
1985ம் ஆண்டிலிருந்து 2004ம் ஆண்டுவரை 19 ஆண்டுகள் ஆஸ்திரேலிய அணிக்காக ஆடிய நீண்ட அனுபவம் கொண்டவர். ஒரு பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் அந்த அணிக்கு சிறந்த பங்காற்றியவர்.
ஆஸ்திரேலிய அணிக்காக 168 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 10,927 ரன்களையும் 325 ஒருநாள் போட்டிகளில் 7,569 ரன்களையும் குவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது பேட்டிங் சராசரி 51.06 ஆகும். மிகச்சிறந்த பேட்ஸ்மேனான ஸ்டீவ் வாக், தனது கெரியரில் மால்கோம் மார்ஷல், வாசிம் அக்ரம், முத்தையா முரளிதரன், வக்கார் யூனிஸ் உள்ளிட்ட பல சிறந்த பவுலர்களை எல்லாம் எதிர்கொண்டு ஆடிய அனுபவம் கொண்டவர்.
இந்நிலையில், ஸ்போர்ட்ஸ் இணையதளத்துக்கு அளித்த பேட்டியில், தற்கால பவுலர்களில் யார் உங்களுக்கு சவாலளிப்பார் என்று நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, தென்னாப்பிரிக்காவின் ஃபாஸ்ட் பவுலர் ரபாடா என்று சொன்னார் ஸ்டீவ் வாக்.
சமகால கிரிக்கெட்டின் மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவராக ரபாடா திகழ்கிறார். ஐசிசி டெஸ்ட் மற்றும் ஒருநாள் ஆகிய இரண்டு தரவரிசைகளிலுமே ரபாடா ஐந்தாமிடத்தில் இருக்கிறார்.
ராகுல் டிராவிட்டிடம் இதே கேள்வி கேட்டபோது கூட, அவரும் ரபாடாவின் பெயரைத்தான் சொன்னார் என்பது குறிப்பிடத்தக்கது.