ஐபிஎல் ஒளிபரப்பின்போது வெளியிடப்படும் விளம்பரங்களுக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பெறும் தொகை, ஐபிஎல்லை ஒளிபரப்ப ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பிசிசிஐக்கு செலுத்தும் தொகை ஆகியவை குறித்த விவரத்தை பார்ப்போம். 

ஐபிஎல்லில் 12 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில், 13வது சீசன் வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் கொரோனாவுக்கு மத்தியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக இந்த ஐபிஎல் சீசன் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் ஸ்டேடியத்திற்குள் அனுமதிக்கப்படாமல், போட்டிகள் நடத்தப்படவுள்ளன. எனவே கிரிக்கெட் ரசிகர்கள், ஐபிஎல் ரசிகர்கள் அனைவருமே டிவியில் மட்டுமே பார்த்தாக வேண்டும்.

மேலும், கொரோனாவால் பெரும்பாலானோர் ஒர்க் ஃப்ரம் ஹோம் முறையில் வீடுகளில் இருந்தே வேலை செய்வதால், இம்முறை ஐபிஎல்லை டிவியில் பார்ப்போரின் எண்ணிக்கையும் ஐபிஎல்லை ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸின் டிஆர்பியும் செமயாக எகிறும். 

இந்நிலையில், ஐபிஎல் போட்டிகளுக்கு இடையே ஒளிபரப்பப்படும் விளம்பரங்களுக்கு, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் 10 நொடிக்கு ரூ.10 லட்சம் பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா லாக்டவுனால் சிறு நிறுவனங்கள் முதல் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் வரை அனைத்துமே பெரும் பொருளாதார இழப்புகளை சந்தித்தன. ஆனாலும் அதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், அனைவருமே ஐபிஎல் போட்டிகளை டிவியில் மட்டுமே பார்த்தாக வேண்டும் என்பதால் அதற்கு இருக்கும் கிராக்கியை கருத்தில்கொண்டு, விளம்பர தொகையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கறார் காட்டுகிறது. 

அதேபோல, ஐபிஎல் ஒளிபரப்பு உரிமத்திற்கு பிசிசிஐக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலுத்தியிருக்கும் தொகையும் மிக அதிகம். ஒரு சீசனை ஒளிபரப்ப ரூ.3270 கோடியை பிசிசிஐக்கு செலுத்தியுள்ளது ஸ்டார் ஸ்போர்ட்ஸ். அந்த தொகையில் பிசிசிஐ சமரசம் செய்துகொள்ளாத நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸும் விளம்பர உரிம தொகையில் சமரசம் செய்துகொள்ளவில்லை. 

எனவே இதற்கு முன் ஐபிஎல் தொடரை ஒளிபரப்பியதன் மூலம் ஈட்டிய வருமானத்தை விட இம்முறை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் கண்டிப்பாக அதிகமாக ஈட்டும்.