சிஎஸ்கே அணியில் சின்ன மலிங்கா..! பேரை கேட்டவுடனே சும்மா அதிருதில்ல
சிஎஸ்கே அணியில் இலங்கை அணியின் இளம் ஃபாஸ்ட் பவுலரும் மலிங்காவை போன்ற பவுலிங் ஆக்ஷன் கொண்டவருமான மதீஷா பதிரனா அறிமுகமாகியுள்ளார்.
ஐபிஎல் 15வது சீசனின் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி மும்பை வான்கடேவில் நடந்துவரும் போட்டியில் சிஎஸ்கேவும் குஜராத் டைட்டன்ஸும் ஆடிவருகின்றன. குஜராத் டைட்டன்ஸ் அணி ஏற்கனவே பிளே ஆஃபிற்கு முன்னேறிவிட்டது. சிஎஸ்கே அணி பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டது. எனவே இந்த போட்டி புள்ளி பட்டியலில் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. இனிமேல் இழப்பதற்கு ஒன்றுமில்லை என்பதால், இதுவரை ஆட வாய்ப்பு கிடைக்காத வீரர்களை பரிசோதிக்க இது நல்ல வாய்ப்பு என்றவகையில் இந்த போட்டியில் சிஎஸ்கே அணியில் 2 வீரர்கள் அறிமுகமாகின்றனர்.
இந்த போட்டிக்கான சிஎஸ்கே அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ராபின் உத்தப்பா, ராயுடு, பிராவோ, மஹீஷ் தீக்ஷனா ஆகிய நால்வரும் நீக்கப்பட்டு, ஜெகதீசன், பிரசாந்த் சோலங்கி, மிட்செல் சாண்ட்னெர், மதீஷா பதிரனா ஆகிய நால்வரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் சோலங்கி மற்றும் பதிரனா ஆகிய இருவரும் சிஎஸ்கே அணியில் அறிமுகமாகியுள்ளனர்.
சிஎஸ்கே அணியில் இந்த போட்டியில் இலங்கையை சேர்ந்த இளம் ஃபாஸ்ட் பவுலர் மதீஷா பதிரனா அறிமுகமாகியுள்ளார். அண்மையில் வெஸ்ட் இண்டீஸில் நடந்து முடிந்த அண்டர் 19 உலக கோப்பையில் இலங்கை அணியில் இடம்பிடித்து அருமையாக பந்துவீசி 4 போட்டிகளில் 7 விக்கெட் வீழ்த்திய அண்டர் 19 ஃபாஸ்ட் பவுலர் மதீஷா பதிரனா.
இலங்கை இளம் ஃபாஸ்ட் பவுலரான 19 மதீஷா பதிரனா, இலங்கை லெஜண்ட் ஃபாஸ்ட் பவுலர் மலிங்காவை போன்ற பவுலிங் ஆக்ஷனை கொண்டவர். இலங்கை அணிக்காகவும், மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் பல அருமையான ஸ்பெல்களை வீசி மேட்ச் வின்னராக ஜொலித்தவர் மலிங்கா. 5 முறை கோப்பையை வென்ற மும்பை அணிக்கு 4 முறை கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் மலிங்கா.
அப்பேர்ப்பட்ட மலிங்காவை போன்றே பந்துவீசக்கூடிய இந்த பதிரனாவை, ஆடம் மில்னேவுக்கு பதிலாக ஒப்பந்தம் செய்த சிஎஸ்கே அணி, அவருக்கு இந்த போட்டியில் ஆட வாய்ப்பளித்துள்ளது.