#SLvsIND அடப்பாவமே.. இலங்கைக்கு மேட்ச்சும் போச்சு; காசும் போச்சு
இந்திய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் பந்துவீச ஒதுக்கப்பட்ட நேரத்தைவிட அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் இலங்கை அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்றுவிட்டது. கடைசி ஒருநாள் போட்டி நாளை நடக்கவுள்ளது.
கொழும்பில் கடந்த 20ம் தேதி நடந்த 2வது ஒருநாள் போட்டியில் தீபக் சாஹரின் அபாரமான பேட்டிங்கால் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 193 ரன்களுக்கே 7 விக்கெட்டுகளை இழந்துவிட்ட இந்திய அணியை தீபக் சாஹர் தான், அந்த இக்கட்டான நிலையிலிருந்து மீட்டெடுத்து வெற்றி பெறச்செய்தார்.
ஜெயிக்க வேண்டிய அந்த போட்டியில் தோல்வியடைந்த இலங்கை அணி, தோல்வியடைந்தது மட்டுமல்லாமல், பந்துவீச அதிக நேரமும் எடுத்துக்கொண்டுள்ளது. ஐசிசி விதிப்படி, பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொள்வது தவறு என்பதால், ஒரு டீமெரிட் புள்ளி வழங்கப்பட்டதுடன், இலங்கை வீரர்களுக்கு போட்டி ஊதியத்தில் 20 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.