#SLvsSA கடைசி ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது இலங்கை
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2-1 என தொடரை வென்றது இலங்கை அணி.
தென்னாப்பிரிக்க அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணியும், 2வது போட்டியில் தென்னாப்பிரிக்க அணியும் வெற்றி பெற்றதையடுத்து தொடர் 1-1 என சமனில் இருந்தது.
இந்நிலையில், தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடந்தது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் ஆடியது. இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் அவிஷ்கா ஃபெர்னாண்டோ(10), தினேஷ் சண்டிமால்(9) ஆகிய இருவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
அதன்பின்னர் காமிண்டு மெண்டிஸ் 16 ரன்னில் ஆட்டமிழக்க, தனஞ்செயா டி சில்வாவும், சாரித் அசலங்காவும் பொறுப்புடன் ஆடி முறையே 31 மற்றும் 47 ரன்கள் அடித்தனர். ஆனால் அவர்கள் கிடைத்த ஸ்டார்ட்டை பெரிய இன்னிங்ஸாக மாற்றாமல் ஆட்டமிழந்துவிட்டனர். இலங்கை அணி தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்துகொண்டே இருந்ததால், அந்த அணியின் ஸ்கோர் பெரிதாக உயரவில்லை.
பின்வரிசையில் துஷ்மந்தா சமீரா(29), சாமிகா கருணரத்னே(16) ஆகியோர் ஓரளவிற்கு பங்களிப்பு செய்ய, 50 ஓவரில் 203 ரன்கள் அடித்த 204 ரன்கள் என்ற இலக்கை தென்னாப்பிரிக்காவுக்கு நிர்ணயித்தது.
204 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்க அணியில் யாருமே சரியாக ஆடவில்லை. தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்துகொண்டே இருந்த தென்னாப்பிரிக்க அணி, 30 ஓவரில் வெறும் 125 ரன்களுக்கே சுருண்டதையடுத்து 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி 2-1 என தொடரை வென்றது.