#SAvsSL 2வது டெஸ்ட்: நோர்க்யாவின் வேகத்தில் தென்னாப்பிரிக்காவிடம் மண்டியிட்டு சரணடைந்த இலங்கை
2வது டெஸ்ட்டில் அன்ரிக் நோர்க்யாவின் வேகத்தில் இலங்கை அணி வெறும் 157 ரன்களுக்கு தென்னாப்பிரிக்காவிடம் முதல் இன்னிங்ஸில் சுருண்டது.
இலங்கை அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் நிலையில், முதல் டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்க அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், 2வது டெஸ்ட் இன்று ஜோஹன்னஸ்பர்க்கில் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் ஆடியது.
டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இலங்கை அணி, அந்த முடிவிற்கு நியாயம் சேர்க்கவில்லை. முதல் இன்னிங்ஸில் வெறும் 157 ரன்களுக்கு 2வது செசனிலேயே ஆல் அவுட்டானது. இலங்கை அணியில் தொடக்க வீரர் குசால் பெரேரா மட்டுமே அரைசதம் அடித்தார். அவரும் 60 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், அவரை தவிர வேறு யாருமே சரியாக ஆடாததால் அந்த அணி சொற்ப ரன்களுக்கு சுருண்டது.
கேப்டன் கருணரத்னே 2 ரன்கள் மட்டுமே அடித்தார். திரிமன்னே, ஹசரங்கா, சமீரா ஆகிய மூவர் மட்டுமே இரட்டை இலக்க ரன் அடித்தனர். மற்ற அனைவருமே ஒற்றை இலக்கத்தில் வெளியேற, இலங்கை அணி வெறும் 157 ரன்களுக்கு சுருண்டது. தென்னாப்பிரிக்க அணியின் ஃபாஸ்ட் பவுலர் அன்ரிக் நோர்க்யா அதிகபட்சமாக ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஃபாஸ்ட் பவுலிங்கிற்கு சாதகமான தென்னாப்பிரிக்க ஆடுகளத்தில் நோர்க்யாவின் அதிவேகத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை அணி 157 ரன்களுக்கு சுருண்டதையடுத்து, தென்னாப்பிரிக்க அணி, முதல் இன்னிங்ஸை தொடங்கி ஆடிவருகிறது.