Asianet News TamilAsianet News Tamil

நாங்க தோற்றதற்கு அதுதான் காரணம்.. ஆட்டத்தின் திருப்புமுனையே அந்த சம்பவம்தான்.. தென்னாப்பிரிக்க கேப்டன் டுப்ளெசிஸ் அதிரடி

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில், தென்னாப்பிரிக்க அணியிடமிருந்து ஆட்டம் கைமீறிய தருணம் எது என்று தென்னாப்பிரிக்க கேப்டன் டுப்ளெசிஸ் கருத்து தெரிவித்துள்ளார். 

south africa captain faf du plessis reveals the turning point of first test
Author
India, First Published Oct 7, 2019, 4:47 PM IST

விசாகப்பட்டினத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, ரோஹித் சர்மாவின் அபார சதம் மற்றும் மயன்க் அகர்வாலின் இரட்டை சதம் ஆகியவற்றால் 502 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. முதன்முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக இறங்கிய ரோஹித் சர்மா, சதமடித்து அசத்தினார். அதேபோல மயன்க் அகர்வாலும் அபாரமாக பேட்டிங் ஆடி இரட்டை சதமடித்தார். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்க அணி 431 ரன்களை குவித்தது. மூன்றாம் நாள் ஆட்டத்தில் ஃபாஸ்ட் பவுலிங்கிற்கு ஆடுகளம் சுத்தமாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. ஸ்பின்னிற்கே சாதகமாக இருந்தது. அதை நன்கு பயன்படுத்தி அபாரமாக பந்துவீசி 7 விக்கெட்டுகளை வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணியை முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட் செய்ய முக்கிய காரணமாக திகழ்ந்தார் அஷ்வின். 

71 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, விரைவில் ஸ்கோர் செய்துவிட்டு தென்னாப்பிரிக்க அணியை பேட்டிங் ஆட விட வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. அதை நன்கு உணர்ந்து அடித்து ஆடிய ரோஹித் சர்மா இரண்டாவது இன்னிங்ஸிலும் சதமடித்தார். ரோஹித்துக்கே டஃப் கொடுக்கும் வகையில் புஜாரா ஆடியதுதான் வியப்பான சம்பவம். முதல் 50-60 பந்துகளில் ஒற்றை இலக்க ரன் அடித்திருந்த புஜாரா, அதன்பின்னர் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி மிரட்டினார். அதன்பின்னர் கோலி, ரஹானே, ஜடேஜா ஆகியோரும் அதிரடியாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர்.

south africa captain faf du plessis reveals the turning point of first test 

இரண்டாவது இன்னிங்ஸை 323 ரன்களுக்கு டிக்ளேர் செய்த இந்திய அணி, 395 ரன்களை தென்னாப்பிரிக்காவிற்கு இலக்காக நிர்ணயித்தது. முதல் இன்னிங்ஸில் சதமடித்த எல்கரை ஒற்றை இலக்கத்தில் வெளியேற்றினார் ஜடேஜா. அதன்பின்னர் டி ப்ருய்னை அஷ்வின் வீழ்த்த, பவுமா, டுப்ளெசிஸ் மற்றும் டி காக்கை ஷமி வீழ்த்தினார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிய மறுமுனையில் நிலைத்து ஆடிய மார்க்ரமை ஜடேஜா வீழ்த்தினார். பின்னர் அதே ஓவரில் ஃபிளாண்டர் மற்றும் கேசவ் மஹாராஜ் ஆகிய இருவரையும் ஜடேஜா வீழ்த்தினார். ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி பிரேக் கொடுத்தார். இதையடுத்து கடைசி 2 விக்கெட்டுகளை ஷமி வீழ்த்த இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த போட்டிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தென்னாப்பிரிக்க கேப்டன் டுப்ளெசிஸ், ரோஹித்தும் புஜாராவும் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய விதம் தான் போட்டியை எங்களிடமிருந்து பறித்து சென்றது. இரண்டாவது இன்னிங்ஸ்தான் மிக கடுமையாக அமைந்தது. நல்ல பிட்ச் தான். நாங்களும் கடுமையாக போராடினோம். ஆனால் இந்திய அணி அபாரமாக பேட்டிங் ஆடியது. ரோஹித்தும் மயன்க் அகர்வாலும் அபாரமாக ஆடினர். 395 ரன்கள் என்ற இலக்கு இந்திய ஆடுகளத்தில் இரண்டாவது இன்னிங்ஸில் அடிப்பது என்பது மிகக்கடினம் என்று டுப்ளெசிஸ் தெரிவித்தார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios