#PAKvsSA 2வது டி20 போட்டியில் பாகிஸ்தானை பந்தாடிய தென்னாப்பிரிக்கா அபார வெற்றி
பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தென்னாப்பிரிக்க அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் வென்ற நிலையில், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியிலும் பாகிஸ்தான் வென்றது. 2வது டி20 போட்டி லாகூரில் இன்று நடந்தது.
டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் மட்டுமே சிறப்பாக ஆடினார். தொடக்க வீரரும் கேப்டனுமான பாபர் அசாம் 5 ரன்னிலும், ஹைதர் அலி 10 ரன்னிலும், டலட் 3 ரன்னிலும் இஃப்டிகார் 20 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
ஒருமுனையில் தொடர்ச்சியாக விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய ரிஸ்வான் அரைசதம் அடித்தார். ஆனால் அதை பெரிய இன்னிங்ஸாக மாற்றாமல் அரைசதம் அடித்த மாத்திரத்தில் 51 ரன்னில் ஆட்டமிழக்க, டெத் ஓவர்களில் ஃபஹீம் அஷ்ரஃப் அதிரடியாக ஆடி 12 பந்தில் 30 ரன்கள் அடித்ததால், 20 ஓவரில் பாகிஸ்தான் அணி 144 ரன்கள் அடித்தது.
145 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் மாலன் 4 ரன்னிலும் ஜேஜே ஸ்மட்ஸ் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தாலும், மற்றொரு தொடக்க வீரரான ஹென்ரிக்ஸும் பில்ஜோனும் சிறப்பாக ஆடி தலா 42 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, டேவிட் மில்லர் கிளாசனும் இணைந்து 17வது ஓவரிலேயே இலக்கை எட்டி போட்டியை முடித்துவைத்தனர். 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி 1-1 என தொடரை சமன் செய்துள்ளது. 3வது டி20 போட்டி தான் தொடரை வெல்லப்போவது எந்த அணி என்பதை தீர்மானிக்கும்.