#RSAvsPAK பாகிஸ்தானை பந்தாடிய தென்னாப்பிரிக்கா அபார வெற்றி..! 14 ஓவரில் சோலியை முடித்து தரமான சம்பவம்
பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது.
தென்னாப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 4 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டி இன்று நடந்தது.
ஜோஹன்னஸ்பர்க்கில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 140 ரன்கள் மட்டுமே அடித்தது. பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ரிஸ்வான்(0), ஷர்ஜீல் கான்(8) ஆகிய இருவரும் ஏமாற்றமளிக்க, அதன்பின்னர் பாபர் அசாமும் முகமது ஹஃபீஸும் இணைந்து 58 ரன்கள் அடித்தனர்.
நன்றாக ஆடிக்கொண்டிருந்த ஹஃபீஸ், 32 ரன்னில் ஆட்டமிழக்க, ஹைதர் அலி(12), ஃபஹீம் அஷ்ரஃப்(5), ஹசன் அலி(12) ஆகியோரும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். அரைசதம் அடித்த கேப்டன் பாபர் அசாமும் 50 ரன்னில் ஆட்டமிழக்க, மற்ற வீரர்கள் அனைவருமே சொதப்பியதால் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு பாகிஸ்தான் அணி வெறும் 140 ரன்கள் மட்டுமே அடித்தது.
141 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்க வீரர்கள் தொடக்கம் முதலே அடித்து ஆடி வேகமாக ஸ்கோர் செய்தனர். அதிரடியாக அடித்து ஆடிய தொடக்க வீரர் மார்க்ரம் அரைசதம் அடித்தார். 30 பந்தில் 54 ரன்கள் அடித்தார் மார்க்ரம். கேப்டன் க்ளாசன் 21 பந்தில் 36 ரன்களும், ஜார்ஜ் லிண்டே 10 பந்தில் 20 ரன்களும் அடிக்க, 14வது ஓவரிலேயே 141 ரன்கள் என்ற இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அபார வெற்றி பெற்றதையடுத்து தொடர் 1-1 என சமனடைந்துள்ளது.