வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 332 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி 2-0 என டெஸ்ட் தொடரை வென்றது. 

வங்கதேச அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ஆடியது. 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 220 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், 2வது டெஸ்ட் போட்டி போர்ட் எலிசபெத்தில் நடந்தது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 453 ரன்களை குவித்தது. பின்வரிசையில் இறங்கிய கேஷவ் மஹராஜ் தான் அதிகபட்சமாக 84 ரன்களை குவித்தார். கேப்டன் டீன் எல்கர் (70), கீகன் பீட்டர்சன் (64) மற்றும் டெம்பா பவுமா (67) ஆகிய மூவரும் அரைசதம் அடித்தனர். இவர்களது சிறப்பான பேட்டிங்கால் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 453 ரன்களை குவித்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய வங்கதேச அணி வெறும் 217 ரன்களுக்கு சுருண்டது. முஷ்ஃபிகுர் ரஹீம் (51) மட்டுமே அரைசதம் அடித்தார். தொடக்க வீரர் தமீம் இக்பால் 47 ரன்களும், பின்வரிசையில் யாசிர் அலி 46 ரன்களும் அடித்தனர்.

236 ரன்கள் என்ற வலுவான முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்க அணி 176 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. எனவே மொத்தமாக 412 ரன்கல் முன்னிலை பெற்ற தென்னாப்பிரிக்க அணி, 413 ரன்கள் என்ற கடினமான இலக்கை வங்கதேசத்துக்கு நிர்ணயித்தது. 

413 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய வங்கதேச அணி, வெறும் 80 ரன்களுக்கு ஆல் அவுட்டானதையடுத்து 332 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, 2-0 என வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது. 2வது டெஸ்ட்டின் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் ஆகிய 2 விருதுகளையும் கேஷவ் மஹராஜ் வென்றார்.