பல காரணங்களுக்கு கிரிக்கெட் மேட்ச் தடைபட்டு பார்த்துருப்பீங்க.. ஆனால் இது ரொம்ப புதுசு.. வீடியோவை பாருங்க
மழை, வெளிச்சமின்மை, சூரிய வெளிச்சம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட கிரிக்கெட் போட்டிகள் பல உண்டு. ஆனால் விஜயவாடாவில் ரஞ்சி போட்டி புதுமையான ஒரு காரணத்திற்காக தடைபட்டது.
மழை, போதிய வெளிச்சமின்மை ஆகிய இரண்டும் தான் போட்டி தடைபடுவதற்கான இயல்பான காரணங்கள். நியூசிலாந்தில் நேப்பியர் மைதானத்தின் ஆடுகளம் கிழக்கு - மேற்காக இருப்பதால், மாலை நேரத்தில் சூரிய ஒளி நேரடியாக பேட்ஸ்மேனின் கண்ணில் படுவதால், அங்கு மாலை நேர ஆட்டம் தடைபடும். இந்தியா - நியூசிலாந்து இடையேயான போட்டி கூட மாலை நேரத்தில் தடைபட்டு, பின்னர் இருட்டியவுடன் நடத்தப்பட்டது.
இதுபோன்ற காரணங்களால் தான் ஆட்டம் தடைபடும். மைதானத்திற்குள் நாய் புகுந்ததால் கூட பாதிக்கப்பட்ட போட்டி உண்டு. ஆனால் ஆந்திரா - விதர்பா இடையேயான போட்டி, மைதானத்திற்குள் பாம்பு புகுந்ததால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
முதல் தர கிரிக்கெட் தொடரான ரஞ்சி தொடர் இன்று தொடங்கியது. இன்று பல போட்டிகள் நடக்கின்றன. அதில் ஆந்திரா - விதர்பா இடையேயான போட்டியும் ஒன்று. விஜயவாடாவில் இந்த போட்டி நடந்துவருகிறது. ஆந்திர அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. இந்த போட்டியின் இடையே மைதானத்திற்குள் புகுந்ததால் ஆட்டம் தடைபட்டது. பாம்பு மைதானத்திற்குள் இருந்த வீடியோவை பிசிசிஐ டுவிட்டரில் பகிர்ந்துள்ளது.
பின்னர் மைதான ஊழியர்களும் மற்றவர்களும் இணைந்து பாம்பை வெளியேற்றியதால் போட்டி தொடர்ந்து நடந்துவருகிறது.