ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணியின் சுழற்பந்து வீச்சாளரான தமிழக வீரர் மணிமாறன் சித்தார்த் ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை எடுத்துள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான 15ஆவது லீக் போட்டி தற்போது பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி லக்னோ அணியில் குயீண்டன் டி காக் மற்றும் கேஎல் ராகுல் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் குயீண்டன் டி காக் அதிரடியாக விளையாடினார்.

ராகுல் சற்று நிதானமாக தொடங்கினாலும், கிளென் மேக்ஸ்வெல் பந்தில் சிக்ஸர் அடித்த நிலையில் அடுத்த பந்திலேயே 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த மார்கஸ் ஸ்டோய்னில் 24 ரன்களில் நடையை கட்டினார். ஒருபுறம் அதிரடியாக விளையாடிய குயீண்டன் டி காக் 36 பந்துகளில் ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது 22ஆவது அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடி 56 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

கடைசியில் வந்த நிக்கோலஸ் பூரன் காட்டு காட்டுன்ன காட்ட லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் குவித்தது. பூரன் 21 பந்துகளில் ஒரு பவுண்டரி 5 சிக்ஸர் உள்பட 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆர்சிபி அணியில் பவுலிங்கைப் பொறுத்த வரையில் கிளென் மேக்ஸ்வெல் 2 விக்கெட் கைப்பற்றினார். ரீஸ் டாப்ளே, யாஷ் தயாள், முகமது சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். பின்னர் 182 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட ஆர்சிபி களமிறங்கியது. இதில், தனது 100ஆவது டி20 போட்டியில் விளையாடும் விராட் கோலி மற்றும் பாப் டூப் ளெசிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

இதில், விராட் கோலி அதிரடியாக தொடங்கினாலும் அவரால் நீண்ட நேரம் களத்தில் நிற்க முடியவில்லை. சுழற்பந்து வீச்சாளர் தமிழக வீரரான சித்தார்த் மணிமாறன் ஓவரில் விராட் கோலி தூக்கி அடிக்க முயற்சித்து 16 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலமாக சித்தார்த் மணிமாறன் ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை எடுத்துள்ளார்.

இந்தப் போட்டியில் விராட் கோலி 56 ரன்கள் எடுத்து ஐபிஎல் கிரிக்கெட்டில் 7500 ரன்கள் குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து கேப்டன் பாப் டூப்ளெசிஸ் ரன் அவுட்டில் வெளியேறினார். கிளென் மேக்ஸ்வெல் ரன் ஏதும் எடுக்காமல் மாயங்க் யாதவ் ஓவரில் ஆட்டமிழந்தார்.

Scroll to load tweet…