Asianet News TamilAsianet News Tamil

#INDvsENG இந்திய அணிக்கு அதிர்ச்சி.. ரன் கணக்கைக்கூட தொடங்காமல் 2வது ஓவரிலேயே முதல் விக்கெட் காலி

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணி, 2வது ஓவரிலேயே ரன் கணக்கை தொடங்குவதற்கு முன்பே முதல் விக்கெட்டை இழந்துவிட்டது.
 

shubman gill got out very second over of the innings of second test against england
Author
Chennai, First Published Feb 13, 2021, 10:13 AM IST

இந்தியா இங்கிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணி 3 அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது. ஸ்பின்னர்கள் சுந்தர், நதீமிற்கு பதிலாக அக்ஸர் படேல், குல்தீப் யாதவ் ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். ஃபாஸ்ட் பவுலர் பும்ராவுக்கு பதிலாக முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி:

ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், புஜாரா, விராட் கோலி(கேப்டன்), அஜிங்க்யா ரஹானே(துணை கேப்டன்), ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), அக்ஸர் படேல், அஷ்வின், குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது சிராஜ்.

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும் கில்லும் இறங்கினர். ஆண்டர்சனுக்கு பதிலாக இந்த போட்டியில் களமிறங்கியுள்ள ஸ்டூவர்ட் பிராட் வீசிய முதல் ஓவரை ரோஹித் சர்மா எதிர்கொண்டார். அந்த ஓவரில் ரன் அடிக்கப்படவில்லை. இதையடுத்து, ஆர்ச்சருக்கு பதிலாக அணியில் எடுக்கப்பட்ட ஃபாஸ்ட் பவுலர் ஆலி ஸ்டோன் 2வது ஓவரை வீச, அந்த ஓவரைல் ஷுப்மன் கில் எதிர்கொண்டார்.  அந்த ஓவரின் 3வது பந்தில் கில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார்.

ஸ்டோன் வீசிய பந்து இன்ஸ்விங் ஆனது. அதை சரியாக கணிக்காத ஷுப்மன் கில், அந்த பந்தை பின்னால் விட நினைத்து பேட்டை தூக்கினார். ஆனால் அந்த பந்து இன்ஸ்விங் ஆகி நேராக வந்து கால்காப்பை தாக்கியது. அதற்கு ரிவியூ எடுக்க, பார்ட்னர் ரோஹித்திடம் ஆலோசித்தார் கில். ஆனால் அந்த இன்ஸ்விங் கண்டிப்பாக ஸ்டம்ப்பை தாக்கும் என்பதால், டி.ஆர்.எஸ் எடுக்க வேண்டாம் என்றுரோஹித் சர்மா கூற, ரன்னே அடிக்காமல் நடையை கட்டினார் கில்.

இதையடுத்து ரோஹித்தும் புஜாராவும் இணைந்து ஆடிவருகின்றனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios