டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் சாதனையை தகர்த்தெறிந்த ஷ்ரேயாஸ் ஐயர்..! தரமான சாதனை
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் சாதனையை தகர்த்துள்ளார் ஷ்ரேயாஸ் ஐயர்.
இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் ஆடாததால், ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைத்தது. இந்திய அணியில் இடம்பெற வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுவதால், தனக்கான இடத்தை பிடிக்க மிகச்சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தை உணர்ந்திருந்த ஷ்ரேயாஸ் ஐயர், அபாரமாக விளையாடினார்.
முதல் டி20 போட்டியில் 28 பந்தில் 57* ரன்கள், 2வது டி20 போட்டியில் 44 பந்தில் 74* ரன்கள், 3வது டி20 போட்டியில் 45 பந்தில் 73* ரன்கள் என்ற 3 டி20 போட்டிகளிலும் அபாரமாக விளையாடி அரைசதம் அடித்த ஷ்ரேயாஸ் ஐயர், ஒரு போட்டியில் கூட அவுட் ஆகவில்லை. இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் அவுட்டே ஆகாமல் 3 அரைசதம் அடித்து, தொடர் நாயகன் விருதையும் வென்றார்.
விராட் கோலியின் பேட்டிங் ஆர்டரான 3ம் வரிசையில் இறங்கி, 3 மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் விளையாடி தன்னை புறக்கணிக்கமுடியாதபடி முத்திரை பதித்துள்ள ஷ்ரேயாஸ் ஐயர், விராட் கோலியின் சாதனையையும் முறியடித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 204 ரன்கள் அடித்தார் ஷ்ரேயாஸ் ஐயர். இதன்மூலம் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் அதிக ரன்களை குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை ஷ்ரேயாஸ் ஐயர் படைத்துள்ளார். இதற்கு முன், 2016ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 199 ரன்களை கோலி குவித்திருந்தது தான் அதிகபட்சமானதாக இருந்தது. இப்போது கோலியின் அந்த சாதனையை முறியடித்துள்ளார் ஷ்ரேயாஸ் ஐயர்.