IND vs NZ டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் இந்திய வீரர்!அறிமுக டெஸ்ட்டில் வரலாற்று சாதனை படைத்த Shreyas Iyer
நியூசிலாந்துக்கு எதிரான அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே வரலாற்று சாதனை படைத்துள்ளார் ஷ்ரேயாஸ் ஐயர்.
இந்தியா - நியூசிலாந்து இடையே கான்பூரில் நடந்துவரும் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 345 ரன்கள் அடித்தது. இந்த டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஷ்ரேயாஸ் ஐயர், அறிமுக டெஸ்ட் இன்னிங்ஸிலேயே சதமடித்து சாதனை படைத்தார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணி, தொடக்க வீரர்கள் டாம் லேதம் (95) மற்றும் வில் யங் (89) ஆகிய இருவரின் பொறுப்பான பேட்டிங்கால் முதல் இன்னிங்ஸில் 296 ரன்கள் அடித்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக அக்ஸர் படேல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
49 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிவரும் இந்திய அணி 51 ரன்களுக்கே கில் (1), மயன்க் அகர்வால் (17), புஜாரா (22), ரஹானே (4), ஜடேஜா (0) ஆகிய 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் ஷ்ரேயாஸ் ஐயரும் அஷ்வினும் இணைந்து சிறப்பாக ஆடி 6வது விக்கெட்டுக்கு 52 ரன்களை சேர்த்தனர். அஷ்வின் 32 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் ஷ்ரேயாஸ் ஐயரும் ரிதிமான் சஹாவும் இணைந்து சிறப்பாக ஆடினர்.
அறிமுக டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் சதமடித்த ஷ்ரேயாஸ் ஐயர், 2வது இன்னிங்ஸிலும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்து இக்கட்டான நிலையிலிருந்த இந்திய அணியை காப்பாற்றினார். 65 ரன்களில் ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழக்க, அதன்பின்னர் சஹாவும் அக்ஸர் படேலும் இணைந்து ஆடிவருகின்றனர்.
இந்த டெஸ்ட்டில் ஷ்ரேயாஸ் ஐயர் வரலாற்று சாதனை படைத்துள்ளார். அறிமுக டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் சதம், 2வது இன்னிங்ஸில் அரைசதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை ஷ்ரேயாஸ் ஐயர் படைத்துள்ளார். சர்வதேச அளவில் இந்த சாதனையை படைத்த 10வது இந்திய வீரர் ஷ்ரேயாஸ் ஐயர்.
கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், விராட் கோலி என இந்தியாவின் எந்த ஜாம்பவான் கிரிக்கெட்டரும் செய்யாத சாதனையை ஷ்ரேயாஸ் ஐயர் செய்துள்ளார்.