அவங்கதான் பஞ்சாபிஸ் அதனால் ஆலமை எடுக்கல..! நீ கராச்சிக்காரன் தானே.. நீ ஏன் எடுக்கல? சர்ஃபராஸை விளாசிய அக்தர்
ஃபவாத் ஆலமை பாகிஸ்தான் அணியில் இத்தனை ஆண்டுகளாக எடுக்காதது குறித்து முன்னாள் கேப்டன் சர்ஃபராஸ் அகமதை கடுமையாக விளாசியுள்ளார் ஷோயப் அக்தர்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கராச்சியில் நடந்த முதல் டெஸ்ட்டில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. அந்த போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதற்கு முக்கியமான காரணம் ஃபவாத் ஆலம் தான். முதல் இன்னிங்ஸில் 27 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது பாகிஸ்தான் அணி.
அதனால், ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன்பின்னர் ஃபவாத் ஆலம் மிக அருமையாக பேட்டிங் ஆடி சதமடித்து பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸை 378 ரன்களை எட்ட உதவினார். சிறப்பாக ஆடி சதமடித்து 109 ரன்களை குவித்தார் ஃபவாத் ஆலம்.
2009ம் ஆண்டே பாகிஸ்தான் அணியில் அறிமுகமாகி, அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்த ஃபவாத் ஆலம், அப்படியே ஓரங்கட்டப்பட்டார். அதன்பின்னர் பாகிஸ்தான் அணியில் அவருக்கு இடமே கிடைக்கவில்லை. இதற்கிடைப்பட்ட காலத்தில் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் அபாரமாக ஆடி ரன்களை குவித்தார் ஃபவாத் ஆலம். ஆனாலும் அவர் பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்படவில்லை. அண்மையில் மீண்டும் பாகிஸ்தான் அணியில் கம்பேக் கொடுத்த ஃபவாத் ஆலம், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சதமடித்து அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார்.
இந்நிலையில், ஃபவாத் ஆலம் அணியில் எடுக்கப்படாதது குறித்து தனது யூடியூபில் பேசியுள்ள ஷோயப் அக்தர், பஞ்சாபை சேர்ந்தவர்கள் ஃபவாத் ஆலமை ஓரங்கட்டினார்கள். மிஸ்பா உல் ஹக் கேப்டனாகவும் இன்சமாம் உல் ஹக் தலைமைதேர்வாளராகவும் இருந்தபோது, ஃபவாத் ஆலம் ஓரங்கட்டப்பட்டார். ஆனால் சர்ஃபராஸ் கராச்சி தான். அப்படியிருக்கையில் சர்ஃபராஸ் கேப்டனாக இருந்த 3 ஆண்டுகளில் சர்ஃபராஸும் ஏன் ஃபவாத் ஆலமை ஒதுக்கினார்? எல்லாவற்றுக்குமே மிஸ்பாவை மட்டுமே குறைசொல்ல முடியாது என்று அக்தர் தெரிவித்துள்ளார்.