சேவாக்கைவிட ரோஹித் சர்மா தான் செம பேட்ஸ்மேன்.. சேவாக்கிற்கு பவுலிங் போட்ட முன்னாள் ஃபாஸ்ட் பவுலரே காரணத்துடன் சொல்றாரு பாருங்க
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதன்முறையாக தொடக்க வீரராக இறங்கிய ரோஹித் சர்மா, இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதமடித்து அசத்தினார்.
டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல் தவித்துவந்த ரோஹித் சர்மாவிற்கு, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் தொடக்க வீரராக இறங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில், முதன்முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக இறங்கிய ரோஹித் சர்மா, தனக்கு இருந்த நெருக்கடியை எல்லாம் மண்டைக்கு ஏற்றாமல் தனது இயல்பான ஆட்டத்தை ஆடி சதமடித்தார்.
முதல் இன்னிங்ஸில் 176 ரன்களை குவித்த ரோஹித் சர்மா, இரண்டாவது இன்னிங்ஸில் விரைவில் ரன்களை குவித்தாக வேண்டிய சூழலில் அதிரடியாக ஆடி சதமடித்தார். சதத்திற்கு பின்னர் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசி ஸ்கோரை விரைவில் உயர்த்தினார். ரோஹித்தின் அதிரடியான ஆட்டம்தான், இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி மிகக்குறைவான நேரத்தில் அதிகமான ஸ்கோரை எட்ட உதவிகரமாகவும் இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்யும் சம்பவமாகவும் அமைந்தது.
முதல் இன்னிங்ஸில் 244 பந்துகளில் 176 ரன்களை குவித்த ரோஹித் சர்மா, இரண்டாவது இன்னிங்ஸில் 149 பந்துகளில் 127 ரன்களை குவித்தார். ரோஹித் சர்மா பெரிதாக பந்துகளை வீணடிக்காமல் ஸ்கோர் செய்தார். ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக இறங்குவதற்கு முன்பாகவே, சேவாக் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு செய்த பங்களிப்பை ரோஹித்தால் செய்யமுடியும் என பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்தனர். அதேபோலவே ரோஹித் அடித்து நொறுக்கியதும், சேவாக்குடன் ஒப்பிடப்படுகிறார்.
இந்நிலையில், ரோஹித்-சேவாக் குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் ஷோயப் அக்தர், ரோஹித் சர்மா சேவாக்கை விட சிறந்த பேட்டிங் டெக்னிக்கை பெற்றிருக்கிறார். சேவாக் ஆக்ரோஷமான மனநிலையில், அடித்து நொறுக்க வேண்டும் என்று நினைப்பார். ஆனால் ரோஹித் சர்மாவின் டைமிங் தான் அவருடைய பெரிய பலம். நிறைய வித்தியாசமான ஷாட்டுகளை மிகவும் நேர்த்தியாக ரோஹித் சர்மா ஆடுகிறார் என்று அக்தர் புகழ்ந்துள்ளார்.